எனக்கு எப்போதாவது மனிதர்கள் கை கொடுத்து உதவி இருக்கிறார்கள். ஆனால் காளை மாடுகளும் குதிரைகளும் என் வாழ்வில் எப்போதும் கால் கொடுத்து உதவி வருகின்றன என்றார் லாடம் கட்டும் கலைஞர் திரு சிங்காரவேலு, 49.
தரங்கம்பாடி நகருக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள இலுப்பூர் என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக்கொண்ட திரு வேலுவின் தந்தை திரு சஞ்சி வீர பாண்டியனும் தந்தையின் தாய்மாமாவும் இதே தொழிலையே செய்துவந்தார்கள்.
திரு வேலு, கிராமத்தில் 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வரும் மக்களின் பேராதரவு பெற்ற இந்திய தலைவர்களில் ஒருவருமான எம்ஜிஆர் மரணமடைந்துவிட்டதால் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட்டனர்.
பள்ளிக்கூடம் பிறகு எப்போது திறந்தது, என்ன ஆனது என்பதெல்லாம் திரு வேலுக்குத் தெரியாது. அடுத்த நாள் 1987 டிசம்பர் 25 முதல் படிப்பை விட்டுவிட்டு திரு வேலு தன் தந்தையுடன் லாடம் கட்டும் வேலைக்குப் போய்விட்டார்.
சொல்லிவைத்தாற்போல் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளன்று-2022 டிசம்பர் 25ஆம் தேதி யதார்த்தமாக அவரைச் சந்தித்தேன்.
“அப்போதெல்லாம் நானும் தந்தையும் நாள் ஒன்றுக்குத் தலா 10 ஜோடி காளை மாடுகளுக்கு லாடம் கட்டுவோம். குதிரைகளுக்கும் கட்டுவோம். ஒரு ஜோடி லாடம் கட்ட அப்போது கூலி 25 ரூபாய்.
“இந்த நிலை 2000ஆம் ஆண்டு வரை நீடித்தது. டிராக்டர், குட்டி லாரிகள் பெருகியதால் பார வண்டி மாடுகள் படிப்படியாகக் குறைந்து விட்டன.
“இப்போது நாள் ஒன்றுக்குச் சராசரியாக ஒரு ஜோடி மாடுகளுக்குத்தான் லாடம் கட்டுகிறேன். ரூ.1,000 முதல் 1,500 வரை கட்ட ணம் வாங்குகிறேன். நடுநடுவே குதிரைகளுக்கும் கட்டுவேன்.
“தந்தை இப்போதும் உடன் வருவார்கள். ஆனால் அவர்களை வேலை செய்ய அனுமதிப்பதில்லை. என் கிராமத்தில் இருந்து சுமார் 100 கி.மீ. சுற்றளவு பரப்புக்குள் அமைந்து உள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் நகர்களுக்கும் சென்று லாடம் கட்டி வருகிறேன். வாடிக்கையாளர்கள் தொலைபேசி மூலம் அழைப்பார்கள்,” என்று திரு வேலு சொன்னார்
“இந்தக் காலத்தில் காலணி இன்றி நடந்து போனால் நம் கால்கள் பழுத்துவிடும். பார வண்டி மாடுகளைப் பொறுத்தவரை, லாடம் இல்லை என்றால் நடக்க முடியாமல் மாடு படுத்துவிடும். பாரத்துடன் வண்டியை முண்டி இழுக்கையில் குளம்பு வேகமாகத் தேய்ந்து இரத்தம் வந்துவிடும்.
“லாடம் கட்டினால் தார் சாலை என்றால் 100 கி.மீ. தொலைவுக்கு மாடு நடக்கும். அதுவே கப்பி, கருங்கல், ஜல்லி சாலை என்றால் 150 கி.மீ; மண்சாலை என்றால் 200 கி.மீ. தொலைவுக்கு லாடம் தேயாமல் தாக்குப் பிடிக்கும்.
“வாடிக்கையாளர்கள் சராசரியாக இரு மாதங்களுக்கு ஒரு முறை லாடம் கட்ட கூப்பிடுவர்.
“எங்கள் வீட்டிலேயே சொந்த மாக கொல்லன் பட்டறை வைத்து இருக்கிறோம். நாங்களே லாடம் அடித்து தயாரிக்கிறோம். தேனி ரும்பில் ஒரு ஜோடி லாடம் தயாரிக்க ரூ.200 செலவாகிறது.
“முன்பு ஆணிகளையும் பட்டறையிலேயே தயாரித்தோம். இப்போது ஆணிகளை மட்டும் வாங்கிக் கொள்கிறோம். ஒரு காளைக்கு எட்டு லாடம் தேவைப்படும். குதிரை என்றால் நான்கு லாடம். குதிரை லாடம் ஒருபுறம் திறந்தபடி நீள்வட்ட வடிவில் இருக்கும்.
“ஒருவரை உதவிக்கு வைத்துக் கொண்டு, காளையை அதன் அடிவயிற்றில் கயிற்றைப் போட்டு இறுக்கினால் மாடு கீழே சாயும். மாட்டை லாவகமாக கையால் தாங்கி, மாட்டிற்கு அடிபடாமல் மிகக் கவனத்துடன் படுக்கவைக்க வேண்டும். இல்லை என்றால் மாட்டின் சப்பை நழுவிவிடும்.
“நமக்கு நகம் போல் மாட்டிற்கு குளம்பு. குளம்பில்தான் லாடத்தை பொருத்த வேண்டும். அதற்கு முன் குளம்பை உளியால் செதுக்கி சமப்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும்.
“பொதுவாக ஆணி 2 செ.மீ. ஆழத்திற்கு இறங்கும். குளம்பு தேயாமல் நல்லபடி இருந்தால் அரைஅங்குலம் ஆழத்திற்குக் கூட அடிக்கலாம். நம் நகத்தில் எதைச் செய்தாலும் நமக்கு வலிக்காது. அதே போல குளம்பில் எதைச் செய்தாலும் மாட்டிற்கு வலிக்காது.
“லாடம் கட்டாத மாட்டிற்கும் லாடம் கட்டிய மாட்டிற்கும் அதன் நடையை வைத்தே வேறுபாட்டை கண்டுபிடித்துவிடலாம்.
“லாடம் கட்டிய மாடு நிமிர்ந்து, தைரியமாக, காலை பயப்படாமல் பூமியில் வைத்து நடக்கும்,” என்று திரு வேலு விளக்கினார்.
திரு வேலுவின் மனைவி காமாட்சி, 45, குடும்ப மாது. அவரின் புதல்வர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
“இப்போதைய வேகத்தில் பார வண்டியும் காளை மாடும் குறைந்து வருமானால் இன்னும் 15, 20 ஆண்டுகளில் அவை சுத்தமாக புழக்கத்தில் இல்லாமல் போய்விடும். என் காலத்தை எப்படியாவது நான் ஓட்டிவிடுவேன். இந்தத் தொழிலை நம்பி என் மகன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாது.
“மாடுகள் தெம்பாக நடைபோட்டு பாரம் இழுக்க நான் உதவுகிறேன். அதேபோல, நானும் என் குடும்பமும் சுயசார்புடன் சொந்தக் காலில் நிமிர்ந்து நடைபோட காளைகள் கால் கொடுத்து உதவுகின்றன,” என்று திரு வேலு கூறியதை ஆமோ திப்பதைப் போல் அவர் லாடம் கட்டிய மாடு எழுந்து கால்களை நன்றாக ஊன்றி நடந்தது.
எம்ஜிஆர் மரணம் அடைந்த 1987 டிசம்பர் 24ஆம் தேதியன்று எனது பள்ளிப் படிப்பு 9ஆம் வகுப்புடன் முடிந்தது. அடுத்த நாள் முதல் நான் என் தந்தையுடன் வேலைக்குப் போய்விட்டேன். அன்று முதல் இன்று வரை காளை மாடு, குதிரைகளுக்கு லாடம் கட்டி வருகிறேன். இதைத் தொடர்வேன்.
திரு சிங்காரவேலு, 49.
மனிதனுக்கு காலணி போல் மாடு, குதிரைக்கு லாடம். தாத்தா, தந்தை, பிறகு தான் என்று காலம் காலமாக லாடம் கட்டும் தொழிலை செய்துவரும் சிங்காரவேலு, 49, காளைமாடு கால்களை நம்பி சொந்தக் காலில் நிற்பதாகக் கூறுகிறார்...
பெருந்தோட்டம் அருகே கொங்கராயநல்லூர் என்ற பேருரூக்குப் பக்கத்தில் உள்ள சகடமங்கலம் என்ற கிராமத்தில் சிஐடி என்ற மிராசுதாரின் காளை மாடுகளுக்குத் திரு சிங்காரவேலு லாடம் கட்டினார். பொதுவாக மாட்டுக்கு இரண்டு பல் முளைத்ததும் லாடம் கட்டலாம் என்றாரவர்.