புதுடெல்லி: ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் நிறைவுபெறும் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தாதுக்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக ‘மத்ஸ்யா 6000’ என்ற ஆய்வு வாகனத்தில் ஆறாயிரம் மீட்டர் ஆழத்திற்கு மூன்று ஆய்வாளர்களை அனுப்பும் நோக்கில் சமுத்ராயன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அவர் கூறியுள்ளார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சரான அவர் எழுத்துபூர்வமாக வழங்கிய பதிலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“புவி அறிவியல் அமைச்சின் கீழ் செயல்படும் சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆழ்கடல் ஆய்வுக்கான ‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை வடிவமைத்து உருவாக்கி உள்ளது. இப்போது அந்த வாகனத்தைக் கொண்டு சில சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“ஆழ்கடல் வளங்கள், பல்லுயிர் மதிப்பீட்டை ஆராய்வதற்காக சுரங்க இயந்திரமும் ஆளில்லா வாகனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன,” என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒன்பது மாநிலங்களும் 1,382 தீவுகளும் கடற்கரையோரம் அமைந்துள்ளன.
கடலடி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நீர்மூழ்கி கலத்தைப் பெற்றுள்ள அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைகிறது என ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இதற்கிடையே, இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணம் 2024ல் மேற்கொள்ளப்படும் என்றும் இணையமைச்சர் கூறியுள்ளார்.
“மனித விண்வெளிப் பயணத்திற்கு நியமிக்கப்பட்ட விண்வெளி வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், மனிதர்களை சுமந்து செல்லும் ‘ககன்யான்-1’ கலம் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
“விண்வெளிக்குச் செல்லும் வீரர்களின் பாதுகாப்பை மனதிற் கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தமது எழுத்துபூர்வ பதிலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.