புதுடெல்லி: ஒரு சில நாடுகளின் மிகையான மீன்பிடிப்பால் இந்திய மீனவர்களின் மீன்பிடி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தவறுசெய்யும் நாடுகளுக்கு ஆதரவாக உலக வர்த்தக அமைப்பு செயல்படுவதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் (படம்) கூறினார்.
மீன்பிடித்தொழில் மானிய பேச்சுவார்த்தைகள் பற்றி உலக வர்த்தக அமைப்பின் அமைச்சகங்கள் இடையேயான கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் நிகோசி, இதர உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் தூதர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் வளர்ந்து வரும் நாடுகளின் உரிமைகள் பற்றி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாகப் பேசினார்.
இந்தியா சார்பாக கடுமையான வாதத்தை முன்வைத்த கோயல், இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இந்தியா தீவிரமாக இருப்பதாகவும், முரணான மானியங்கள் மற்றும் ஒரு சில நாடுகளின் மிகையான மீன்பிடிப்பால் இந்திய மீனவர்களும் அவர்களது வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தில் சம அளவு மற்றும் நேர்மை இன்னும் கண்டறியப்படாதது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உருகுவே சுற்றின்போது மேற்கொண்ட தவறுகளால், வேளாண்மை போன்ற துறைகளில் குறிப்பிட்ட வளர்ந்த உறுப்பு நாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் போன்று தற்போதும் நாம் தவறு செய்யக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். மீன்வளத் திறன்களை இன்னும் மேம்படுத்தவேண்டிய இந்தியா உள்ளிட்ட நாடுகளால் தங்களது எதிர்கால லட்சியங்களைத் தியாகம் செய்ய முடியாது என்று கோயல் தெளிவுபடுத்தினார்.