புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் இணைப்பதில் அனைத்து கட்சிகளும் உறுதியாக உள்ளன என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தை டெல்லியில் உள்ள கார்கி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரு ஜெய்சங்கர் கூறியதாக ‘இந்து தமிழ்’ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை மாற்ற முடியாது என மக்கள் நினைத்தார்கள். ஆனால் அது மாற்றியமைக்கப்பட்டது. அதன் பின்னர் காஷ்மீரின் ஒட்டுமொத்த நிலவரமும் மாறியது என்று மாணவர்கள் முன்னிலையில் திரு ஜெய்சங்கர் தெரிவித்ததாக ‘இந்தியா டுடே’ ஊடகம் குறிப்பிட்டது.
“காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவை நீக்கியது ஒரு சரியான முடிவு. அதனால் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்கு முக்கியம் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் என்றால், அது பற்றிய எண்ணம் நமது சிந்தனையில் இருக்க வேண்டும். அப்படி ஏற்பட்டு விட்டால், மற்றதெல்லாம் நிச்சயம் ஏதாவது ஒரு நேரரத்தில் நடந்துவிடும்,” என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பொருளியல் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக முசாபர்பாத்தில் சனிக்கிழமை (மே 11) போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.