கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ்மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவரே பாலியல் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆளுநர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க காவல்துறை துணை ஆணையர் இந்திரா முகர்ஜி தலைமையில் எட்டு உயரதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோல்கத்தா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், விசாரணைக்கு உதவும் வகையில் ஆளுநர் மாளிகையில் உள்ள கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளையும் காவல்துறை கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, சிலரிடம் விசாரணை நடத்துவதற்காக வெள்ளிக்கிழமையன்று (மே 3) காவல்துறை அதிகாரிகள் சிலர் ஆளுநர் மாளிகைக்குச் சென்றதாகச் சொல்லப்பட்டது.
முன்னதாக, தனக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்த ஆளுநர் போஸ், அது அரசியல் சதி என்றும் அதன்மூலம் ஊழல், வன்முறையை வெளிப்படுத்தும் தனது முயற்சிகளைத் தடுக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.