பிலிபித்: இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறுவன் கொலை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அச்சிறுவன் உயிருடன் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தன் தாய்வழித் தாத்தாமீதும் மாமன்கள்மீதும் தன் தந்தை பொய் வழக்கு போட்டுள்ளதாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அந்த 11 வயதுச் அச்சிறுவன் தெரிவித்தான்.
இதனையடுத்து, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இவ்வழக்கில் மனுதாரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அச்சிறுவனின் தாய்க்கும் தந்தைக்கும் 2010 பிப்ரவரியில் திருமணம் நடந்தது.
இந்நிலையில், மேலும் மேலும் வரதட்சணை கேட்டு அப்பெண்ணை அவருடைய கணவர் அடித்தும் உதைத்தும் வந்ததாகக் கூறப்பட்டது. அதனால் ஏற்பட்ட காயங்களால் அப்பெண் 2013 மார்ச்சில் இறந்துவிட்டார்.
அதன்பின், அச்சிறுவன் தன் தாய்வழித் தாத்தா வீட்டில் வளர்ந்து வருகிறான்.
இதனையடுத்து, தன் மகனைத் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி அச்சிறுவனின் தந்தை நீதிமன்றத்தை நாடினார். பதிலுக்குச் சிறுவனின் தாத்தா தரப்பிலிருந்தும் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தன் மாமனாரும் அவருடைய நான்கு மகன்களும் சேர்ந்து, தன் மகனைக் கொன்றுவிட்டதாக அச்சிறுவனின் தந்தை குற்றம் சாட்டினார். அதனையடுத்து, அச்சிறுவனின் தாத்தாமீதும் மாமன்கள்மீதும் காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது.
அதனை ரத்து செய்யக் கோரி சிறுவனின் தாத்தா தரப்பு அலகாபாத் நீதிமன்றத்தை நாடியது. ஆனால், அவர்களது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி குறிப்பிட்டது.
இதனையடுத்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர் என்று அவர்கள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் கூறினார்.
இவ்வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் 2024 ஜனவரியில் மீண்டும் விசாரிக்கப்படும்.