புதுடெல்லி: இந்தியத் தேர்தல் வரலாற்றில் இதற்குமுன் இல்லாத வகையில், ஒரு சட்டமன்றத் தொகுதியின் எல்லா வாக்குச்சாவடியையும் பெண்களே நிர்வகித்துள்ளனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் (வடக்கு) தொகுதியே இந்தப் பெருமையைப் பெற்றுள்ளது.
சட்டீஸ்கர் சட்டமன்றத் தேர்தலையொட்டி, இரண்டாம் கட்டமாக இம்மாதம் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை 70 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, ராய்ப்பூர் (வடக்கு) தொகுதியின் 201 வாக்குச்சாவடிகளிலும் முழுக்க முழுக்க பெண்களே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 1,046 பெண்கள் தேர்தல் பணியாற்றினர்.
“பெண்களே எல்லா வாக்குச்சாவடிகளையும் நிர்வகித்ததால் வாக்காளர்களும், குறிப்பாகப் பெண்களும் மூன்றாம் பாலினத்தவரும் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் உணர்ந்தனர்,” என்று தேர்தல் ஆணையம் ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளது.
சட்டீஸ்கர் சட்டமன்றத்திற்கு மொத்தம் 90 இடங்கள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இம்மாதம் 7ஆம் தேதி இடம்பெற்றது. டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
வெள்ளிக்கிழமையன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.