குட்டிப்புரம்: பள்ளி ஆசிரியர் ஒருவரை பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் அடித்து உதைத்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மலப்புரம் மாவட்டம், குட்டிப்புரம் நகரிலுள்ள பேரசன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் இச்சம்பவம் அரங்கேறியது.
பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நடக்கவிருந்ததால் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.
ஆனாலும், சில மாணவர்கள் வீட்டுக்குச் செல்லாமல் பள்ளி வளாகத்திலேயே சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, அடுத்த வாரம் நடக்கவுள்ள கலாசார விழாவிற்கு உயர்நிலை வகுப்பு மாணவியர் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தனர். அவ்விடத்திற்குச் சென்ற அந்த மேல்வகுப்பு மாணவர்கள், அம்மாணவியரைச் சீண்டியதாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து ஆசிரியைகள் சஜீஷ் என்ற ஆசிரியரின் கவனத்திற்குக் கொண்டுசென்றனர். அங்கு விரைந்த சஜீஷ், அம்மாணவர்களை உடனே பள்ளியைவிட்டு வெளியேறும்படி அறிவுறுத்தினார்.
இதையடுத்து, அவர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் சஜீஷின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, பள்ளியைவிட்டுச் சென்றனர்.
சற்று நேரம் கழித்து, அந்த ஒரு மாணவர் பள்ளி உணவகத்தின்முன் இருந்ததை சஜீஷ் கண்டார். அதுகுறித்து அவரிடம் விசாரித்த சஜீஷ், பின்னர் அவரை அழைத்துக்கொண்டு, பள்ளி முதல்வர் அலுவலகத்திற்குச் சென்றார்.
அதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், பள்ளி முதல்வர் முன்பாகவே சஜீஷைத் தாக்கத் தொடங்கினார். சஜீஷின் வலக்கையைப் பிடித்து முறுக்கியதில், அவர் வலிதாங்காமல் கீழே விழுந்தார்.
உடனே பள்ளி முதல்வரும் சக ஆசிரியர்களும் சஜீஷைத் தூக்கி, நாற்காலியில் அமர வைத்தனர். ஆனாலும், ஆத்திரம் அடங்காத அம்மாணவர், சஜீஷின் நெஞ்சில் ஓங்கி மிதித்தார். அவரது காலணித் தடம் சஜீஷின் சட்டையில் பதிந்தது.
இதனைத் தொடர்ந்து, அம்மாணவர் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
காயமடைந்த சஜீஷ் முதலில் குட்டிப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் மாத்ருபூமி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஆசிரியரைத் தாக்கிய மாணவர்மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.