திருவனந்தபுரம்: தொடர்ந்து இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் (மே 9) பல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூர் விமான நிலையங்களிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லவிருந்த விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன.
இப்படித் திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிருப்தியும் விரக்தியும் அடைந்தனர்.
“இன்று (வியாழக்கிழமை) கத்தாருக்கு விமானம் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நேற்று உறுதியளித்தது. ஆனால், அவர்கள் சொன்னதுபோல் செய்யவில்லை. நான் செல்லவிருந்த விமானம் தொடர்ந்து இரண்டாவது நாளாகக் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது,” என்று கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் பயணி ஒருவர் ஆதங்கப்பட்டார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இன்னொரு பயணி, இன்றுடன் தனது வேலை விசா முடிவடைவதாகச் சொன்னார்.
“திருவனந்தபுரம் விமான நிலையத்தை நான் வந்தடைந்ததும் நான் செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இன்றிரவுக்குள் வளைகுடாப் பகுதியிலுள்ள வேலையிடத்திற்கு நான் திரும்பாவிடில், எனது விசா முடிவடைந்து, எனது வேலையை இழக்க நேரிடும்,” என்றார் அப்பயணி.
வேறு விமானத்தில் பயணச்சீட்டு வாங்கி, பயணம் செய்யுமாறு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தன்னிடம் சொன்னது என்றும் ஆனால் தன்னால் அப்படிச் செய்ய முடியாது என்றும் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து கிளம்பவிருந்த இன்னொரு பயணி சொன்னார்.
“இன்னொரு விமான நிறுவனத்தினுடைய விமானத்தில் பயணம் செய்ய ஏதுவாக அவர்கள் ஏன் பயணச்சீட்டு வாங்கித் தரக்கூடாது?” என்று அவர் கேட்டார்.
பணிக்குத் திரும்பக் காலக்கெடு
இதனிடையே, விமானப் பணியாளர்கள் பலரும் ஒட்டுமொத்தமாக மருத்துவ விடுப்பு எடுத்ததால் புதன்கிழமையன்று 90க்கும் அதிகமான விமான சேவைகளை ரத்து செய்ய நேரிட்டதை அடுத்து, 25 விமானப் பணியாளர்களுக்குப் பணிநீக்கக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன், மருத்துவ விடுப்பு எடுத்துள்ள மற்ற ஊழியர்கள் வியாழக்கிழமை மாலை 4 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் இல்லையேல் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
போதிய விமானப் பணியாளர்கள் இல்லாததால் வியாழக்கிழமையன்றும் குறைந்தது 60 விமான சேவைகளை டாடா நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ரத்து செய்துள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.