ஜீ தமிழ் ‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ மூன்றாம் பருவம் நிறைவை எட்டியுள்ளது என்றாலும், சிங்கப்பூர், மலேசிய இளம்பாடகர்களுக்கு அது நீங்கா நினைவுகளை அளித்துள்ளது.
‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ புகழ்பெற்ற நடுவர்களின் முன்னிலையில் நேரடியாகப் பாடும் அரிய வாய்ப்பினைப் பெற்ற மகிழ்ச்சியோடு சிங்கப்பூர் திரும்பவுள்ளார் அனன்யா சனூப்,13.
சக சிங்கப்பூர்வாசி சஞ்ஜெய் கார்த்திகேயா சுரேஷ் குமார், 10, ‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ ஆசிய பசிபிக் போட்டிகளில் தலைசிறந்த ஐவரில் இடம்பிடித்த பெருமையைப் பெற்றுள்ளார்.
கோலாலம்பூரில் நடந்த இரண்டாம் சுற்றில், அவர்களும் மலேசியாவின் நிஷாந்தினி நித்யஸ்ரீ நேசன், ஹேமித்ரா ரவிச்சந்திரன், சஹானா நவிந்திரன் ஆகியோரும் போட்டியிட்டனர்.
அனன்யாவும் ஹேமித்ராவும் அவர்களில் தலைசிறந்த இரு பாடகர்களாக அறிவிக்கப்பட்டு, ஜீ தமிழின் ஏற்பாட்டில் சென்னைக்குப் பறந்து, நடுவர்களின் முன்னிலையில் நேரடியாகப் பாடினர்.
தனித்துவமான குரல்கொண்ட அனன்யா
அனன்யா ‘சிநேகிதனே’ பாடலைப் பாடி முடித்ததும் அரங்கிலிருந்த சக இளம்பாடகர்களும் நடுவர் குழுவினர் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டினர்.
அனன்யா மிகச் சிறப்பாகப் பாடியதாகவும் வலிமையான, தெளிவான குரல் கொண்டிருப்பதாகவும் பாராட்டினார் நடுவர் ஸ்ரீநிவாஸ்.
“அழகான, தனித்துவமான குரல் கொண்டுள்ள அனன்யா எதிர்காலத்தில் பெரிய பின்னணிப் பாடகராகச் சாதிக்கவேண்டும்,” என நடுவர்கள் விஜய் பிரகாஷும் சைந்தவியும் வாழ்த்தினர்.
தோழர் ஒருவர் இல்லையேல், இவ்வாய்ப்பையே நழுவவிட்டிருப்பார் அனன்யா. போட்டிக்கான பதிவுகள் முடிந்துவிட்டன என தவறுதலாக எண்ணியிருந்த அவருடைய தாயாரிடம் உண்மை நிலவரத்தை அந்தத் தோழர்தான் உணர்த்தினார்.
கடந்த ஐந்தாண்டுகளாக கர்நாடக இசை பயின்றுவரும் அனன்யா, இதன்மூலம் திரையிசையின் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார். திரையிசையை ‘யூடியூப்’ மூலமே கற்றுவந்திருந்த அனன்யாவுக்கு இது ஒரு முக்கியப் படிக்கல்.
பியானோ, வாய்ப்பாட்டில் தேர்ச்சிபெற்ற சஞ்ஜெய்
மாறாக, கர்நாடக இசையே தெரியாவிடினும், தான் ஐந்தாண்டுகளாகக் கற்று நான்காம் நிலையை அடைந்திருந்த பியானோவையும், ஆறு மாதங்களாகக் கற்றுவந்த மேற்கத்திய இசையையும் அடிப்படையாகக் கொண்டு, ஆசிரியர், குடும்பத்தினரின் ஊக்கத்தால் இப்போட்டியில் கலந்துகொண்டார் சஞ்ஜெய். இது அவரது முதல் பாட்டுப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முறை இன்னும் வெகுதூரம் செல்லவிரும்பும் சஞ்ஜெய், கர்நாடக இசை வகுப்புகளில் சேர்ந்துள்ளார்.
சீரான சுருதியில் பாடி அசத்திய ஹேமித்ரா
சென்னைக்குச் சென்று ‘முன்பே வா’ பாடலைப் பாடிய மலேசியாவின் ஹேமித்ரா ரவிச்சந்திரன், 11, நடுவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
சரியான சுருதியை எடுத்த எடுப்பில் பாடியதையும், தானாக ஒரு சங்கதியை உட்புகுத்தியதையும் வெகுவாக பாராட்டினர் நடுவர்கள்.
ஐந்து வயது முதல் தேவார இசையையும் எட்டு வயது முதல் கர்நாடக இசையையும் கற்றுவந்துள்ள ஹேமித்ரா, சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரங்கள் 2023, தேசிய தினப் போட்டிகள் 2022, 2023 என பலவற்றிலும் பரிசு வென்றவர். எனினும், இந்தியாவில் இத்தகைய பெரிய மேடையில் பாடியது இவருக்கு முதல் அனுபவமே.
அனன்யா, ஹேமித்ராவின் இசைப்பயணம், டிசம்பர் 24ஆம் தேதி ‘ஜீ தமிழ்’ ஆசிய பசிபிக் ஒளிவழியில் சிங்கப்பூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
அது தொடர்பான முன்னோட்டத்துக்கு: https://www.facebook.com/watch/?v=748153203826005