தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரெஜினா கஸான்ட்ரா. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ‘ஃபிளாஷ்பேக்’, ‘பார்டர்’ ஆகிய படங்கள் வெளியீடு காணத் தயாராக உள்ளன. அஜித்துடன் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்துக்காக அஸர்பைஜான் நாட்டுக்குச் சென்று திரும்பியுள்ளார்.
நடிப்புடன் கடல்சார் சாகச விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார் ரெஜினா.
கடல், கடலோர இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் இவர், நெகிழிப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
“நெகிழி உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் உலக அளவில் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே நாம் வசிக்கும் இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பதுடன் நமது கழிவுப் பொருள்களால் பிறர்க்கும் ஆபத்து நேரக்கூடாது,” என்கிறார் ரெஜினா.
கடந்த மாதம் ‘அனைத்துலக பூமி’ தினத்தன்றுசென்னை கடற்கரைகளில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட ரெஜினா, அதன் தொடர்ச்சியாகத் தற்போது ‘சப் மெரினா கிளப்’புடன் இணைந்து பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
“கடற்கரை, நீர்நிலைகளின் அவசியம் நமக்குத் தெரியும். அந்தப் பகுதிகளை தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை,” என்கிறார் ரெஜினா.
நீர்நிலைகளைக் குப்பைக் கிடங்காக மாற்றிவிடக் கூடாது என்று குறிப்பிடுபவர், ஒவ்வொருவரும் தங்களுடைய நெகிழி, இதரக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்.
“தற்போதைய சூழலில் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதற்காகவே இதுபோன்ற பணிகளை ஆர்வமாகச் செய்து வருகிறேன்.
“நான் ஏற்கெனவே குறிப்பிட்ட ‘சப் மரினா கிளப்’ குழு அனிஷ் என்ற 12 வயது சிறுவனால் வழிநடத்தப்படுகிறது. அச்சிறுவனைப் பார்த்த பிறகே எனக்கு அந்தக் குழுவில் இணையும் ஆர்வம் வந்தது.
“ஒரு சிறுவனால் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள முடியும் எனில், பெரியவர்கள் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்,” என்கிறார் ரெஜினா.
கவர்ச்சியாக நடிக்கும் நாயகிகளில் ரெஜினாவும் ஒருவர். எனினும் கவர்ச்சிக் கதாபாத்திரங்களைப் புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளாராம். எனினும் இது தற்காலிக ஏற்பாடாக மட்டுமே இருக்கும் என்கிறார்.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் திரிஷாதான் கதாநாயகி என்றாலும் ரெஜினாவின் கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
“பெரும் பொருட்செலவில் உருவாகும் படங்களில் நடிக்க யாருக்குத்தான் கசக்கும். அதிலும் அஜித் போன்ற முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எளிதில் அமைந்துவிடாது.
“இந்த வாய்ப்பை அளித்த அஜித்துக்கும் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் நன்றி,” என்கிறார் ரெஜினா.