தமிழ் திரை உலகின் சிறந்த பின்னணி பாடகிகளில் ஒருவரான உமா ரமணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.
தன் கணவர் ரமணனுடன் சென்னையில் வசித்து வசந்த உமா, கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சை பெற்று வந்த போதிலும் மே 1ஆம் தேதி இரவு அவர் காலமானதாகக் குடும்பத்தார் தெரிவித்தனர்.
‘நிழல்கள்’ படத்தில் ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் உமா. பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசை அமைப்பில் பாடியுள்ளார்.
உமாவும் அவரது கணவர் ஏ.வி.ரமணனும் ஆயிரக்கணக்கான மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். ஏராளமான மேடை கச்சேரிகளில் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
உமாவின் மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் பாடிய பாடல்களை ஏராளமானோர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
பாடகி உமா ரமணனின் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.