முதன்முறையாக நடிகர் மாதவனுடன் இணைந்து நடிக்க உள்ளார் சாய் தன்ஷிகா.
கடைசியாக 2021ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘லாபம்’ படத்தில் நடித்திருந்தார் இவர். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் கோடம்பாக்கம் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.
இந்நிலையில், நடன அமைப்பாளர் ராதிகா இயக்கும் படத்தில் தன்ஷிகாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்படத்துக்கு ‘தி புரூஃப்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமக்கும் ராதிகாவுக்கும் இடையே உள்ள ஆழமான நட்பைப் பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ளது என்கிறார் தன்ஷிகா.
“நான் ராதிகாவின் நெருக்கமான தோழி என்பதற்காக இப்படத்தில் நடிக்கவில்லை. உண்மையில் குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை உணர்ந்துதான் நடிக்க வைத்துள்ளார் ராதிகா.
“நான் பங்கேற்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ராதிகாவும் இணைந்து செயல்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு வெளியீடு கண்ட ‘திறந்திடு சீசே’ என்ற படத்தில் நான் பங்கேற்ற ஒரு பாடல் காட்சியை அமைத்தது ராதிகாதான். அதன் பிறகு இருவரும் மேலும் நெருக்கமாகி விட்டோம்.
“சில சமயங்களில் நமது நண்பர்களுக்காக வாய்ப்புகளை ஏற்று நடிக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘பேராண்மை’ படத்தில் நடித்த நான், பின்னர் 2021இல் அவரது இயக்கத்தில் ‘லாபம்’ படத்தில் நடித்தேன்.
“இப்போது நட்புக்காக ராதிகாவின் படத்தில் நடிக்க வேண்டியுள்ளது. நட்புக்காக மட்டுமின்றி. திரைத்துறை மீது அவர் வைத்துள்ள மரியாதை, நெறிமுறைகள் ஆகியவையும் என்னைக் கவர்ந்தது மற்றொரு முக்கிய காரணம்.
“பொதுவாக படப்பிடிப்பு முடிந்த பிறகு உடற்பயிற்சிக்கூடம் செல்ல விரும்புவேன். எத்தனை மணியாகி இருந்தாலும் கவலைப்பட மாட்டேன். மேலும் அன்று இரவே மறுநாள் நடக்க உள்ள படப்பிடிப்புக்கான காட்சி, வசனங்களை மனப்பாடம் செய்வேன்.
“சில சமயங்களில் இதையெல்லாம் அருகில் இருந்து பார்த்துள்ளார் ராதிகா. இதுதான் எங்களை மேலும் நெருக்கமடைய வைத்தது எனலாம்,” என்கிறார் தன்ஷிகா.
இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் மூலமாகவே திரைத்துறை மீது இவர் கொண்டுள்ள மரியாதையையும் அர்ப்பணிப்பையும் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் இவருக்கு நெருக்கமானவர்கள்.
தன்ஷிகாவின் திரைப்பயணம் பல்வேறு மேடு பள்ளங்களை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும் தாம் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதை எட்டும் நல்ல படங்களாக அமைய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார்.
“தற்போது நடிகர் மாதவனுடன் இணைந்து ஒரு தொடரில் நடிக்கிறேன். இத்தொடரில் நடிக்க மூன்று முக்கியமான காரணங்கள் உள்ளது.
“மாதவனுடன் நடிப்பது முதல் காரணம். அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முன்னணி நாயகனுக்கு ஜோடி சேர்ந்துள்ளேன். மூன்றாவதாக ‘யாரடி நீ மோகினி’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படைப்புகளைத் தந்த குழுவுடன் மீண்டும் இணைகிறேன்,” என்கிறார் சாய் தன்ஷிகா.
“எனது திரைப்பயணத்தை பார்க்கும்போது ஒன்று புரியும். ‘அரவாண்’, ‘பரதேசி’, ‘கபாலி’, ‘இருட்டு’ ஆகிய படங்களையும் அவற்றில் நான் நடித்த கதாபாத்திரங்களையும் உற்று கவனியுங்கள். அப்போதுதான் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் எனும் எனது வேட்கை புரியும். ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் உங்களுக்கு நீண்ட நாள்கள் கைகொடுக்காது. பல வாய்ப்புகளை நான் தட்டிக்கழிக்க இதுதான் முக்கிய காரணம்,” என்கிறார் சாய் தன்ஷிகா.
நாயகியை முன்னிலைப்படுத்தும் பட வாய்ப்புகளும் தேடி வந்தனவாம். எனினும் அவற்றை ஏற்காத தன்ஷிகா, மாறுபட்ட கதை, கதைக்களங்கள் அமைய வேண்டும் என்பதே தமது விருப்பமாக உள்ளது என்கிறார்.
தற்போது ‘ஐந்தாம் வேதம்’ என்ற இணையத்தொடரில் நடித்து வரும் இவர், முன்பு ஓடிடி தளங்களுக்கு தாம் எதிர்ப்பு தெரிவித்ததை ஒப்புக்கொள்கிறார். ஆனால் கொரோனா நெருக்கடி காலம் தமது எண்ணத்தை முற்றிலுமாக புரட்டிப்போட்டது என்கிறார்.
“கொரோனா காலகட்டத்தில் பல இணையத்தொடர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் ஏராளமான நடிகர்கள் பங்கேற்று இருந்தனர். அப்போதுதான் இணையத்தொடர்கள் பலரது திறமைகளை அடையாளம் காண கைகொடுக்கின்றன என்பதை உணர்ந்தேன். இப்போது ஓடிடி தளங்களும் தேவை என உணர முடிகிறது,” என்கிறார் தன்ஷிகா.
தற்போது ‘யோகிடா’ என்ற வணிக அம்சம் நிறைந்துள்ள படத்தில் நடிக்கிறாராம். இதற்காக மாறுபட்ட சிகை அலங்காரத்தைப் பின்பற்றுகிறார். ‘கபாலி’க்குப் பின்னர் ஓர் அதிரடி நாயகியாக ரசிகர்கள் தமக்கு வரவேற்பு அளிப்பார்கள் என உறுதியாகச் சொல்கிறார் தன்ஷிகா.
“ரஜினியுடன் இணைந்து நடிக்கும்போது மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைச் சென்றடைய முடியும். அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதற்கு இதுவும் முக்கிய காரணம்,” என்கிறார் சாய் தன்ஷிகா.