இளையர்களைக் கவரும் வகையில் ‘பியார் பிரேமா காதல்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் இளன். தற்போது கவின் நாயகனாக நடிக்கும் ‘ஸ்டார்’ என்ற படத்தை உருவாக்கி உள்ளார்.
இந்தப் படத்துக்கும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புவதாகக் குறிப்பிடுபவர், கொரோனா நெருக்கடி வேளையில்தான் இந்தக் கதையை எழுதியதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“கொரோனா நெருக்கடிக்குப் பிறகு கவின் நடித்த ‘டாடா’ படம் வெளிவந்தது. அதில் கவினின் நடிப்பு பிரமாதம் என்று அனைத்துத் தரப்பினரும் பாராட்டியது, படம் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
“கவினை பத்து ஆண்டுகளுக்கு முன் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதன் பிறகு தொடர்பு ஏதும் இல்லை.
“நான் உருவாக்கிய கதையில் கவின் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவரை நேரில் சந்தித்துக் கதை சொல்லியபோது அவருக்கும் ரொம்பப் பிடித்துப்போனது.
“உடனே படப்படிப்பைத் தொடங்கிவிட்டோம். ‘ஸ்டார்’ படத்தின் தொடக்கப்புள்ளி என் அப்பாதான். அவருக்கான சமர்ப்பணமே இந்தப் படம்,” என்கிறார் இயக்குநர் இளன்.
இவரது தந்தை பாண்டியனும் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தாராம். அவரது திரைப்பயணம் மிக நெடியது என்கிறார்.
எனினும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், புகைப்படக் கலைஞராக மாறிவிட்டாராம்.
“புகைப்படக் கலைஞராக வேலை பார்த்து, பின்னர் துணை நடிகராக மாறி, இறுதியில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது ஒரு பெரிய பயணம்தானே?
“அப்பாவின் உழைப்புதான் இந்தப் படத்துக்கான உந்துசக்தி எனலாம். அதற்காக சினிமாவைப் பற்றிய படம் என்று நினைத்துவிடக் கூடாது. எந்தக் கனவாக இருந்தாலும் அதை நோக்கிப் பயணம் மேற்கொண்டு, உண்மையாக உழைக்கும் எல்லாருமே ‘நட்சத்திரம்’தான் என்பதை உணர்த்தும் படம் இது,” என்கிறார் இயக்குநர் இளன்.
இந்தப் படத்துக்கு முதலில் ‘மீசை’ என்ற தலைப்பைதான் இவர் தேர்வு செய்திருந்தாராம். அதன் பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற தலைப்பை பரிசீலித்திருக்கிறார்.
“நான் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகன். எனினும் இத்தலைப்பை வைப்பது விமர்சனங்களை ஏற்படுத்திவிடுமோ என்ற யோசனையும் எழுந்தது. அதனால்தான் தலைப்பைச் சுருக்கிவிட்டோம். படத்தின் முதல் காட்சியைப் பார்த்த பிறகு தலைப்புக்கான காரணம் புரியும்,” என்கிறார் இளன்.
நாயகன் கவினுடைய நடிப்பு அருமை என்று பாராட்டுபவர், மிக விரைவில் தமிழ்ச் சினிமாவின் முன்னணி நாயகர்களின் பட்டியலில் அவர் இடம்பெறுவார் என்கிறார்.
“‘ஒரு நடிகராக கவினுடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது. காட்சியின் தன்மைக்கு ஏற்ப அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள், முகபாவனைகள் அருமை.
“அடுத்தடுத்து நல்ல கதைகளைத் தேர்வு செய்து வைத்திருக்கிறார். இனி முன்னணி நடிகர்கள் பட்டியலில் ஐந்து இடங்களுக்குள் கவின் இடம்பெறுவதைப் பார்க்க முடியும்.
“அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன் என்று அவருக்கு இப்படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர்,” என்கிறார் இளன்.
யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம் என்று குறிப்பிடுபவர், தனக்கு முதல் பட வாய்ப்பை அளித்தமைக்காக அவருக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாகச் சொல்கிறார்.
“என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் யுவன். அவர் எனது முதல் படத்தைத் தயாரித்தவர். அவருடைய குணங்களில் சில அனைவரிடமும் இருந்தால், இந்த உலகம் மிகவும் அமைதியாக இருக்கும். அவருக்கு யார் மீதும் கோபம் வராது, இப்படம் அவருக்குப் பிடித்தமானதாக உள்ளது என்று என்னால் சொல்ல முடியும்.
“இதில் ஆறு முழுப் பாடல்கள், நான்கு சிறிய பாடல்கள் என்று மொத்தம் பத்துப் பாடல்கள் உள்ளன. ரசிகர்களுக்கு இசை விருந்து காத்திருக்கிறது,” என்கிறார் இளன்.