ஜோதிகா நடித்திருந்த உடன்பிறப்பே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஜோதிகா விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.
நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘உடன்பிறப்பே’.
அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ஜோதிகாவின் அண்ணனாக சசிகுமார் தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கணவராக சமுத்திரக்கனி நடித்திருப்பார்.
இப்படம் தன்னுடைய திரை வாழ்க்கையில் மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என்று நடிகை ஜோதிகா பலமுறை கூறி இருக்கிறார். தற்பொழுது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்குத்தான் ஜோதிகா தயாராகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்தப் பேச்சு வார்த்தை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ’உடன்பிறப்பே 2’ உறுதி ஆகியுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு துவங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இயக்குநர் ரா.சரவணனுக்கு ஒரு பெரிய தொகை முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே ஜோதிகாவை மீண்டும் கிராமத்து மணம் கமழும் கதாபாத்திரத்தில் பார்க்கப்போவது உறுதியாகியுள்ளது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்தப் படம் இருக்கும் என்றும் முதுமையிலும் அண்ணன் - தங்கை பாசம் மாறாது என்ற கோணத்தில் இப்படம் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.