தமிழ் சினிமாவின் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த நடிகை மும்தாஜ் இதுவரை தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான உண்மைக் காரணத்தைப் பகிர்ந்துள்ளார்.
டி.ராஜேந்தர் இயக்கிய ‘மோனிஷா என் மோனலிசா’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் மும்தாஜ்.
‘மலபார் போலிஸ்’, ‘குஷி’, ‘பட்ஜெட் பத்மநாதன்’, ‘லூட்டி’, ‘ஸ்டார்’, ‘வேதம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சில படங்களில் கவர்ச்சிக் குத்தாட்ட நடனம் ஆடியுள்ளார். ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா” நடனமும் ‘மல மல மருதமல்லே’ பாடலுக்கு மும்தாஜ் ஆடிய நடனமும் இப்போதும் ரசிகர்கள் மனதை கிறங்கடித்து வருபவை.
ஆனால், தற்போது படங்களில் நடிக்காமல், 43 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டி வருகிறார்.
இதுகுறித்து மும்தாஜ் அளித்துள்ள பேட்டியில், “வாழ்க்கையில் நான் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து இருக்கிறேன்.
“ஒரு நாள் திடீரென என் இடுப்புப் பகுதியை அசைக்கமுடியாத அளவிற்கு வலி இருந்தது.
“இரு வருடங்களாக அந்த வலியோடு இருந்த எனக்கு ஒரு பரிசோதனையில் ‘ஆட்டோ இம்யூனிட்டி டிசார்டர்’ நோய் இருப்பது தெரியவந்தது.
“எங்கெல்லாம் எலும்பின் இணைப்புகள் இருக்கிறதோ அங்கெல்லாம் கடுமையான வலி இருக்கும். மனநோயாலும் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன், ஏன் அழுகிறேன், எதற்கு அழுகிறேன் என்றே தெரியாது.
“இந்நோய் தாக்கத்தால் திருமண வாழ்கையில் இணைய முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். இதுவே நான் திருமணம் செய்து கொள்ளாததற்கு முக்கிய காரணம்.
“மற்றவர்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும்போது எனக்கும் அதுபோல் இருக்கத் தோன்றும். ஆனால், மனரீதியாக நான் அதற்குத் தயாராக இல்லை என்பதே உண்மை.
“என் மன பாதிப்பை புரிந்துகொண்டு என்னை அதில் இருந்து மீட்டது என் குடும்பத்தினரும் ஆண்டவனும்தான்.
“அவர்கள் மட்டும் இல்லையெனில் நான் இப்போது உயிரோடு இருந்திருப்பேனா என்பதுகூட சந்தேகம்தான்,” என தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தைப் பகிர்ந்துள்ளார் மும்தாஜ்.