தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா.
தெலுங்கு மொழியில் நடித்துக் கொண்டிருந்தபோது நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய சமந்தா திடீரென ‘மயோசிடிஸ்’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் மீண்டும் நடிக்கத் தொடங்கிய சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் நோயால் பாதிக்கப்பட்டார். இதையொட்டி சிகிச்சைக்குப் பின் சினிமாவில் இருந்து விலகி சமந்தா ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்.
அடிக்கடி சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றிய படங்களை பகிர்ந்து வரும் சமந்தா, தற்போது புதிய காணொளி ஒன்றை சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“நான் எப்போது மீண்டும் நடிக்க வருவேன் என பலர் கேட்கிறார்கள். விரைவில் சினிமாவில் திரும்ப நடிக்க இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு உடல் நலம் பற்றிய பதிவு ஒன்றை அடுத்த வாரம் வெளியிடுவேன். அது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று சமந்தா கூறியுள்ளார்.
சமந்தாவின் காணொளியைக் கண்ட அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.