‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஆர்யா, “சந்தானம் மீது எப்போதுமே ரசிகர்களுக்கு ஒரு தனிப் பிரியம் உள்ளது. விரைவில், கார்த்திக் யோகி இயக்கத்தில் அட்வெஞ்சர் ஃபேண்டஸி கதையில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறோம்,” என்றார்.
‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் ஆர்யா பேசியபோது, “பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நடிக்கும்போது எனக்கும் சந்தானத்திற்கும் ஒரே கேரவன்தான்.
“அப்போது, சந்தானத்தைப் பார்ப்பதற்காக ஒரு ரசிகர் கேரவனுக்குள்ளேயே வந்துவிட்டார். அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்களுக்கு அவ்வளவு அன்பு.
“நிச்சயம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெற்றிபெறும். இயக்குநர் கார்த்திக்கும் அப்படத்தின்மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள விஸ்வா தெலுங்கில் நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். தமிழில் இந்தப் படமும் அவருக்கு வெற்றி தரும்.
“65 நாள்கள் படப்பிடிப்பு என்றதும் என்னிடம் உடல்நலனைப் பராமரிக்கும் குறிப்புகள் எல்லாம் சந்தானம் கேட்டார். நானும் சொன்னேன். ஆனால், பிறகு கேட்டால் அவர் மேகா ஆகாஷுடன் படப்பிடிப்புத் தளத்தில் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றார்.
“அந்த அளவுக்கு உடல் நலன் மீது அவருக்கு அக்கறை உண்டு. படத்தில் அனைவரும் சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளனர்,” என்றார்.