‘கேப்டன் மில்லர்’ படத்தின் கதை தன்னுடையது என்றும் தன் கதையைத் திருடி விட்டார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் வேல ராமமூர்த்தி.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் இந்தப் படம் நடிகரும் எழுத்தாளருமான வேலராமமூர்த்தி எழுதிய ‘பட்டத்துயானை’ நாவலின் கதையை திருடி எடுக்கப்பட்டு உள்ளதாக வேல ராமமூர்த்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வேல ராமமூர்த்தி, ‘குற்ற பரம்பரை’, ‘குருதி ஆட்டம்’, ‘அரியநாச்சி’ உள்ளிட்ட பல நாவல்களுக்காக புகழ்பெற்றவர்.
இது தொடர்பாக அவர் பேசியபோது, “கேப்டன் மில்லர்’ படத்தின் கதை எனது ‘பட்டத்து யானை’ நாவலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக கேள்விப்பட்டேன். இதெல்லாம் செய்ய அசிங்கமா இல்லையா? பட்டத்துயானை நாவலை எழுதிய நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் அல்லது அனுமதி வாங்கி இருக்கலாம்.
“கேப்டன் மில்லர் மட்டுமல்ல இன்னும் பல படங்களிலும் எனது கதைகள், காட்சிகள் திருடப்பட்டுள்ளன.
“ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திலும் எனது நாவலில் இருந்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக வாசகர்கள் வேதனை தெரிவித்திருந்தனர்.
“கேப்டன் மில்லர்’ கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.
“புகார் தந்தாலும் வலுத்தவன் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள். தமிழ் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக உள்ளது. ஒரு படைப்பாளியின் கதையை கூச்சமே இல்லாமல் திருடுகின்றனர். ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது,” என்று அவர் கோபமாக பேசினார்.