பொங்கல் அன்று மட்டும் விவசாயிகளை நினைக்கக்கூடாது என்றும் விவசாயிகளுக்கு என்றென்றும் நன்றி கூற வேண்டும் என்றும் நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
இவரது ’உழவன் பவுண்டேஷன்’ அமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான ’உழவன் விருது’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கார்த்தியின் தந்தையும், நடிகருமான சிவகுமார், நடிகைகள் ரோகிணி, கீர்த்தி பாண்டியன், நடிகர்கள் தம்பி ராமையா, பசுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கார்த்தி, “நாம் நாள்தோறும் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்து விடுகிறோம். சினிமா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்திலுமே வெற்றி பெறும்போது விழா எடுத்து கொண்டாடுகிறோம்.
“ஆனால் எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் நமக்கான உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளை கொண்டாடுவதில்லை. அவர்களைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே ’உழவன் விருதுகள்’ வழங்கப்படுகின்றன. இந்த விருதின் மூலம் அவர்களுடைய வாழ்வில் ஒரு சிறு வெளிச்சத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன்,” என்றார் கார்த்தி.