நீங்கள் என்னை வைத்துப் படம் எடுத்தால் விமானம் வாங்கி அதன்மீது நடனம் ஆடுவேன் என்று ஷாருக்கான் இயக்குநர் மணிரத்னத்திடம் கூறினார்.
அண்மையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த நடிகர் ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம் இடையேயான உரையாடல் குறித்த காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த காணொளியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம், “நீங்கள் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து 20, 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிப்பீர்களா?” என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த நடிகர் ஷாருக்கான், “என்னை வைத்து ஒரு படம் இயக்குங்கள் என்று ஒவ்வொரு முறையும் உங்களைச் சந்திக்கும்போதும் கேட்கிறேன். கெஞ்சி கேட்கிறேன். நீங்கள் சரி என்று சொன்னால், இம்முறை ‘தைய தைய’ பாடலுக்கு விமானத்தின் மேல் ஏறி கூட ஆட தயாராக இருக்கிறேன்,” என்று இயக்குநர் மணிரத்னத்திடம் கூறினார்.
அதற்கு பதிலளித்த இயக்குநர் மணிரத்னம், “நீங்கள் விமானம் வாங்கும்போது நான் உங்களை வைத்து படம் இயக்குகிறேன்,” என்றார்.
பதிலுக்கு, “மணி, என் அண்மை படங்களின் வெற்றியை பார்க்கையில், விமானம் வாங்குவது வெகு தொலைவில் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். விரைவில் வாங்குவேன். கதையைத் தயார் செய்யுங்கள்,” என்று கலகலப்பாக பேசினார். இருவரின் இந்த உரையாடல் குறித்த காணொளி தற்போது வலைத்தலங்களில் பரவி வருகிறது.