கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ரகுதாத்தா’. அந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியில், “இந்தியை திணித்தே தீருவோம் என்றால் இந்தி தெரியாது போயா” என்று நகைச்சுவையாக பேசும் காட்சி வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குநர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள ‘ரகுதாத்தா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து காணொளி ஒன்றை வெளியிட்ட படக்குழு “கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் வருகிறாள் வள்ளுவன்பேட்டையின் வீர மங்கை கயல்விழி! ரகு தாத்தா, விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்!” என்று குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. அதில், நகைச்சுவையாக “இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால் இந்தி தெரியாது போயா!” போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்ற அழுத்தமான வசனங்கள் கொண்ட இந்த காணொளியை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரவலாக்கி வருகின்றனர்.