தெலுங்கில் அறிமுகமாகி இன்று கோலிவுட் திரையுலகில் கொடி கட்டிப் பறக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.
“படத்தில் முக்கியமான, அழுத்தமான காட்சிகளில் நடிகை சுகாசினியைப் போல் சிரித்துக்கொண்டே அழுதபடி நடிப்பதற்கு மிகவும் பிடிக்கும்.
“இந்தக் காட்சிகளை எல்லாம் திரையில் காண்பதற்கு இன்னும் அதிகம் பிடிக்கும்,” என பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், பிரபல யூடியூப் ஒளி அலை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிரியங்கா மோகன், கவர்ச்சியான பாத்திரங்களில் நடிப்பது குறித்தும் மனம் திறந்துள்ளார்.
“என்னால் ஓரளவிற்கு மேல் கவர்ச்சி காட்டி நடிக்கமுடியாது. எனக்கென்று ஓர் எல்லை வைத்துள்ளேன். அந்த எல்லைக்கோட்டை எள்ளளவும் தாண்டக்கூடாது என்பதே என் கொள்கை. ஏனெனில், கவர்ச்சி ஒருவரது தோற்றத்திற்கு ஒத்து வரவேண்டும் அல்லவா?
“ஒவ்வொரு படத்தின் தொடக்கத்திலும் நான் பதற்றமாக இருப்பேன்,” எனக் கூறியுள்ள பிரியங்கா, “இலைமறை காய்மறையாக கவர்ச்சி காட்டத்தான் பிடிக்கும். மேனி அழகை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதை கவர்ச்சி எனச் சொல்லிவிட முடியாது.
“எனது கதாபாத்திரத்தில் இருக்கும் கவர்ச்சி யாரும் முகம் சுழிக்கமுடியாத அளவில் இருக்கும். என்னை நம்பி அனைவரும் குடும்பத்துடன் படம் பார்க்க வரலாம்,” என்று பேசியுள்ளார் பிரியங்கா.
‘கேப்டன் மில்லர்’ நாயகன் தனுஷ் சமூக ஊடகப் பதிவில், “வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி அசுரத்தனமான உழைப்பைத் தந்து அனைவரும் சேர்ந்து உருவாக்கிய படம் தான் ‘கேப்டன் மில்லர்’.
“இயக்குநர் அருண் மாதேஸ்வரனை முதன்முதலில் பார்த்தபோது, காதில் கம்மல் எல்லாம் போட்டுக்கொண்டு இருந்தார். என்ன இவர் இப்படி இருக்கிறார்? என்று தோன்றியது.
“கதை சொன்னார், இது எல்லாம் பண்ண முடியுமா? என சந்தேகம் வந்தது. அவரிடமே பண்ண முடியுமா எனக் கேட்டேன், பண்ணலாம் என்றார்.
இப்போது படம் பார்க்கும்போதுதான் அதன் அர்த்தம் புரிகிறது. படத்தில் மிரட்டியிருக்கிறார்.
‘கேப்டன் மில்லர்’ என்பதன் சுருக்கம் ‘மரியாதைதான் சுதந்திரம்’ என்பதாகும். ஆனால் இங்கே எங்கு மரியாதை இருக்கிறது? எதற்குச் சுதந்திரம் இருக்கிறது? எது சொன்னாலும் எது செய்தாலும் இங்குக் குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஏன் என்றே புரியவில்லை. ஒரு சின்ன கூட்டம், இதை செய்துகொண்டே இருக்கிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் நம் வேலையைச் செய்வோம்,” எனக் கூறியுள்ளார்.
“தமிழ் சினிமாவும் இந்திய சினிமாவும் பெருமைப்படும் படைப்பாக ‘கேப்டன் மில்லர்’ இருக்கும். ஓர் உலகப்படமாக, மிகவும் புதிய படமாக, உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும்,” என இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.