ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் ’மிஷன் சப்டர் 1’.
இப்படத்தின் படப்பிடிப்பில் நாள்தோறும் குறைந்தபட்சம் 1,500 பேர் இருப்பார்கள் என்றும் அந்த அளவுக்கு அதிக பொருள் செலவில் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது என்றும் சொல்கிறார் அருண் விஜய்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இந்தப் படம் வெளியீடு காண்கிறது. இந்நிலையில் இப்படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது அருண் விஜய் பேசுகையில், படப்பிடிப்பின்போது சிறிது நேரம் கூட ஓய்வெடுக்க முடியாத வகையில் இடைவிடாமல் காட்சிகள் படமாக்கப்பட்டன என்றும், இயக்குநர் விஜய் அந்த அளவுக்கு கச்சிதமாகத் திட்டமிட்டு படப்பிடிப்பை நடித்தி முடித்தார் என்றும் பாராட்டினார்.
பல ஆண்டுகளாக நடித்து வரும் நிலையில் முதன்முறையாக பொங்கல் திருநாளன்று தாம் நடித்த திரைப்படம் வெளியீடு காண்பது தனிப்பட்ட வகையில் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.
“என்னதான் அனைவரும் கடுமையாக உழைத்திருந்தாலும், ஒரு திரைப்படம் குறித்த தேதியில் வெளியாவது, இன்றைய தேதியில் மிக முக்கியமான ஒன்றாகும். அந்த அளவுக்கு திரையுலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன,” என்றார் அருண் விஜய்.
இந்தப்படத்தின் கதை தமக்கு மிகவும் பிடித்து இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அடிதடி உணர்வுபூர்வமான காட்சிகள் என இப்படத்தில் அனைத்தும் உரிய விகிதங்களில் இடம் பெற்றுள்ளதாக கூறினார்.
’மிஷன் சாப்டர் 1’ படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். எனவே, திரை அரங்கில் படம்பார்க்கும் போது மனநிறைவு ஏற்படும்.
“ஜி.வி.பிரகாஷ் இசை இந்தப் படத்திற்கு பெரிய பலம். லண்டன், சென்னை என பல்வேறு இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
“இந்தப் படத்துக்காக சுமார் ஐந்து ஏக்கரில் மிகப் பெரிய அளவிலான சிறைச்சாலை போன்ற அரங்கை அமைத்தோம். ஆனால் சில காரணங்களால் அரங்கம் சேதமடைந்தது.
“தயாரிப்பு நிறுவனமான லைக்கா செலவு குறித்தெல்லாம் சற்றும் கவலைப்படவில்லை. எனவே மீண்டும் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது,” என்றார் அருண் விஜய்.
இந்தப் படம் தம்மை வேறு ஒரு கோணத்தில் வெளிப்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், அடிதடி, உணர்வுபூர்வமான காட்சிகளில் புதிய அணுகு முறையைக் கையாண்டுள்ளதாக கூறினார்.
“பொங்கல் பண்டிகையின்போது வெளியாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.
“எங்களையும் ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை,” என்றார் அருண் விஜய்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய், ’அயலான்’. ‘கேப்டன் மில்லர்’ ஆகிய இரண்டு அசுரத்தனமான படங்களுக்கிடையே ’மிஷன் சாப்டர் 1’ படமும் திரை காண்கிறது என்கிறார்.
பல்வேறு சிரமங்களை கடந்துதான் இந்த படத்தை வெளியிட முடிகிறது என்றும் இதில் நடித்துள்ள கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் என அனைவருமே சிறந்த முறையில் பங்களித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.’
“அருண் விஜய் அனுபவம் வாய்ந்த நடிகர் என்பதுடன், இயக்குநரின் பொறுப்புகளை உணர்ந்த நடிகர். இந்தப் படத்துக்காக பெரிதும் மெனக்கெட்டார். நடிகை நிமிஷா பட்டேல் நிச்சயமாக இந்தியத் திரை உலகில் பலவற்றைச் சாதிப்பார். எமி ஜாக்சன், இயல் உள்ளிட்ட அனைவருமே கடுமையாக நடித்தனர்.
“இந்தப் படம் நிச்சயமாக ஆகச் சிறந்த திரையரங்க அனுபவத்தைத் தரும்,” என்றார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.