வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
எந்த மொழியாக இருப்பினும் மாறுபட்ட கதாபாத்திரம் என்றால் உடனடியாக விஜய் சேதுபதி நினைவுதான் இயக்குநர்களுக்கு வருகிறது.
அவரும் இயக்குநர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் சிறப்பான நடிப்பை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வில்லனாக நடிப்பது தமக்குப் பிடித்திருக்கிறது என்றார்.
“நிஜ வாழ்க்கையில் என்னால் யாரையும் கொடுமைப்படுத்த முடியாது. எனக்கு அத்தகைய மனம் இல்லை. கொலை செய்வது என்பதை என்னால் கற்பனை கூட செய்ய இயலாது.
“ஆனால் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும்போது இத்தகைய வாய்ப்புகள் அமைகின்றன. நிஜ வாழ்க்கையில் கோபமோ, பொறாமையோ எதுவாக இருந்தாலும் அவற்றை வெளிபடுத்தாமல் பணிவாகத்தான் இருக்க முடியும். ஆனால் திரைப்படங்களில் உணர்ச்சிகளோடு விளையாடலாம்,” என்றார் விஜய் சேதுபதி.
தாம் இவ்வாறு கூறியதற்காக தயவுகூர்ந்து யாரும் தன்னைத் தவறாக நினைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், உணர்ச்சியுடன் விளையாடுவது என்பது உணவின் சுவையை போன்றது என்றார்.
“எனது நடிப்பில் அனைத்துவிதமான சுவைகளும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதனால்தான் வில்லனாக நடிக்க விரும்புகிறேன்,” என்றார் விஜய் சேதுபதி.