தன்னுடைய நீண்டநாள் கனவுகள் ’கேப்டன் மில்லர்’ படத்தின் மூலம் நிறைவேறியுள்ளதாக சொல்கிறார் நடிகை நிவேதிதா சதீஷ்.
இவர் ’மகளிர் மட்டும்’, ’வணக்கம்’, ’சில்லு கருப்பட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ’கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளது தமக்கே வியப்பாக உள்ளது என்று அண்மைய பேட்டியில் நிவேதிதா குறிப்பிட்டுள்ளார்.
“நான் நடிக்க வந்தபோது மூன்று பெரிய கனவுகளை மனதில் சுமந்து கொண்டிருந்தேன். பெரிய பொருள்செலவில் உருவாகும் படத்தில் நடிக்க வேண்டும், அது ‘பீரியட்’ படமாக இருக்க வேண்டும், தனுஷுடன் ஜோடி சேர வேண்டும் ஆகியவைதான் அந்த ஆசைகள்.
“இந்த மூன்று கனவுகளும், ஒரே படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்தப் படத்திற்காக இயக்குநரும் கதாநாயகன் தனுஷும் கடுமையாக உழைத்துள்ளனர். எனவே நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்,” என்கிறார் நிவேதிதா.