லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டமாக அஸர்பைஜானில் முழுவீச்சுடன் நடந்து வந்தது.
அஜித், திரிஷா, பிரியா பவானி ஷங்கர், அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பலரும் படப்பிடிப்பில் நடித்து வந்தனர். அஸர்பைஜான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.
படம் குறித்த தகவல் அடிக்கடி வெளியான நிலையில் தற்போது நடிகர் அஜித் இரண்டு கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு ஒரு இடைவேளை எடுத்துள்ளார். புத்தாண்டு மற்றும் தனது மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அஜித் குடும்பத்தினர் துபாய் சென்றனர்.
புத்தாண்டு மற்றும் மகளின் பிறந்தநாளை துபாயில் குடும்பத்துடன் அஜித் மகிழ்ச்சியாக கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின.
மேலும் ஹோட்டல் ஒன்றில் பணிப்பெண் ஒருவருடன் அஜித் நடனமாடிய காணொளியும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் அஜித் எரிச்சலடையச் செய்த சம்பவம் ஒன்று இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. அஜித் நடந்து செல்லும்போது ரசிகர் ஒருவர் அவரை காணொளி எடுத்து இருக்கிறார்.
அதைப் பார்த்து எரிச்சலடைந்த அஜித் அந்த ரசிகரிடம் இருந்து கைப்பேசியை வாங்கி காணொளியை நீக்கிய பின்னர் கைப்பேசியைக் கொடுத்தார்.
இதனை ஒருவர் காணொளியாக பதிவுசெய்து வெளியிட்டுள்ளார். அஜித் கைப்பேசியைப் பெற்று காணொளியை நீக்கிய காட்சிகள் தற்போது இணையத்தில் பரவலாகி வருகிறது.