ஒரு முழுமையான கதாநாயகனாக தம்மை இன்னும் தயார்ப்படுத்தி வருவதாகச் சொல்கிறார் நடிகர் பாபி சிம்ஹா.
அண்மையில் வெளியீடு கண்ட ‘சலார்’ திரைப்படத்தில் இவர் நடிப்பு சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் பாபி.
மேலும் இவர் நடித்து முடித்துள்ள ’தடை உடை’ படம் வெளியீடு காண தயாராக உள்ளதாம். கமல்ஹாசனுடன் நடிப்பதன் மூலம் திரையுலகம் சார்ந்த பல்வேறு நுணுக்கங்களை எளிதில் கற்றுக்கொள்ள முடிவதாகச் சொல்கிறார்.
“என்னைப் பொறுத்தவரை கமல்ஹாசன் என்ற மகா கலைஞனை இந்தியத் திரையுலகம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பேன்.
“ஒவ்வொரு காட்சியையும் அவர் மெருகூட்டும் விதம் வியப்பளிக்கிறது. நாள்தோறும் படப்பிடிப்பில் ஏதாவது ஒரு விஷயத்தை அவரிடம் இருந்து கற்றுக்கொள்வதும் இவர் எப்பேர்ப்பட்ட மனிதர் என்று ஆச்சரியம் அடைவதும் வழக்கமாகிவிட்டது.
“ஒரு கதாபாத்திரத்திற்குள் நுழைந்து அவ்வாறே அவர் மாறுவது அந்தக் கலைஞனுக்கு மட்டுமே சாத்தியமானது,” என்று பாராட்டுகிறார் பாபி சிம்ஹா.
’இந்தியன் 2’ படத்தில் தமக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்து இருப்பதாகச் சொல்பவர், அது குறித்து மேலதிகத் தகவல்களைத் தற்போது தெரிவிக்க இயலாது என்கிறார்.
அண்மையில் வெளியீடு கண்ட ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் விமர்சன ரீதியில் பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில், அதன் முதல் பாகத்தில் தாம் நடித்ததை மறக்க இயலாத அனுபவம் என்கிறார்.
அந்தப் படத்தில் அசால்டு சேது என்ற கதாபாத்திரம் பாபிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது.
இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் இவரே நடித்திருந்தால் நன்றாக இருக்கும் எனப் பல ரசிகர்கள் கூறினராம்.
“இரண்டாம் பாகத்தில் சீசர் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்க வேண்டும் என நண்பர்களும் தெரிவித்தனர். ஆனால் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு மிகச் சிறந்த நடிப்பை வழங்கி இருந்தனர்.
“எனவே, படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் அதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களில் வேறு ஒருவரை கற்பனை செய்வது தேவையற்றது,” என்கிறார் பாபி.
பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இன்னும் முழுநீள வணிகப்படத்தில் நாயகனாக நடிக்கவில்லை.
இந்த எண்ணமும் விருப்பமும் மனதில் ஏற்பட்ட உடனேயே சொந்தத் தயாரிப்பில் ’வசந்த முல்லை’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்திருந்தார் பாபி. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் ராகேஷ் இயக்கத்தில் ’தடை உடை’ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இது குடும்பத்துடன் பாரத்து ரசிக்கக்கூடிய வணிக அம்சங்களைக் கொண்ட படமாக இருக்குமாம்.
“இன்னமும்கூட எனக்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதற்கு அதிகம் மெனக்கெடுகிறேன். பல அம்சங்களை ஆராய்வதன் மூலம் நான் ஏற்கும் கதாபாத்திரம் ஒரு நடிகனாக எனது நடிப்புப் பசிக்கு தீனிபோடும் என நம்புகிறேன்.
“மேலும் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற வேட்கை அதிகமாக இருப்பதால் இதுவரை திரையுலகில் நான் சாதித்தவை குறித்து எனக்கு மனநிறைவு ஏற்படவில்லை. இன்னும் நிறைய சாதிக்க விரும்புகிறேன்,” என்கிறார் பாபி சிம்ஹா.