‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் பற்றி பிரபலங்கள் பெருமையாகப் பதிவிட்டு வருகிறார்கள்.
இயக்குநர் சங்கர் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் குறித்து தனது வலைத்தளத்தில், “ஜிகர்தண்டா 2’ படம் சிறப்பாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜின் சிறப்பான புத்திசாலித்தனமான படைப்பு. இப்படத்தின் இரண்டாம் பாதி எதிர்பார்க்காத வகையில் அமைந்திருக்கிறது.
“இப்படம் சினிமாவுக்கான மரியாதையை உயர்த்தி உள்ளது. லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணனின் இசை மிரட்டலாக உள்ளது,” என்று படத்தைப் பாராட்டி இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ், “மிகச்சிறப்பாக நடிப்பது எஸ்.ஜே.சூர்யாவிற்கு வழக்கமான ஒன்றாக அமைந்துவிட்டது. ராகவா லாரன்ஸ் சிறப்பாக நடித்துள்ளார்,” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், “இந்தப் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு. லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா? என பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார். திருவின் கேமரா விளையாடி இருக்கிறது. தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை சந்தோஷ் நாராயணன் இந்தப் படம் மூலம் நிரூபித்திருக்கிறார். பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு என் தனி பாராட்டுகள்.
“படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கின்றனர். இந்தப் படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களைக் கைதட்ட, சிந்திக்க, அழ, பிரம்மிக்க வைக்கிறார்.
“நான் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் கார்த்திக் சுப்புராஜ். படக்குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பாராட்டியுள்ளார்.
பல பிரபலங்களின் பாராட்டகளைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் திரையரங்கை நோக்கி படையெடுக்கிறார்கள்.