கங்கனா ரணவத் நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் ஏராளமானவற்றைக் கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. படம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் கேட்கின்றனர்.
“முதலில் நவம்பர் 24ஆம் தேதியன்று வெளியிடத் திட்டமிட்டோம். ஆனால் நான் நடித்துள்ள சில படங்கள் ஏற்கெனவே வெளியீடு காணத் தயாராக உள்ளன. எனவே ‘எமர்ஜென்சி’ படம் அடுத்த ஆண்டு வெளியாகும்,” என்று கங்கனா கூறியுள்ளார்.
தனது சொத்துகளை விற்றும் அடமானம் வைத்தும் இப்படத்தை உருவாக்கி உள்ளதாகவும் பொருளியல் ரீதியில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் கங்கனா.
‘எமர்ஜென்சி’ படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் இவர் நடித்து இயக்கி உள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் கங்கனாதான்.
இந்தப் படத்துக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் ஏற்கெனவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக வெளிவந்த தகவல்களை அடுத்து காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஆனால் கங்கனா தரப்பிலோ, படத்தை முழுமையாகப் பார்ப்பதற்கு முன்பே எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமல்ல என்றும் இது செயற்கையாக உருவாக்கப்படும் எதிர்ப்பு என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ரசிகர்கள் மட்டுமல்லாமல், அரசியல் பிரமுகர்களும் இப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.