மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் ஜெயம் ரவி. எனினும் முந்திய படங்கள், கதாபாத்திரங்களின் சாயல் அறவே இருக்காது என்கிறார் `இறைவன்’ படத்தின் இயக்குநர் அஹமத்.
`வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ என வெவ்வேறு கதைக்களங்களில் ஜனரஞ்சகமான படங்களை இயக்கிய இவர், அடுத்து `இறைவன்’ படத்துடன் ரசிகர்களைச் சந்திக்கிறார்.
“ஜெயம் ரவியும் இப்படத்தின் நாயகி நயன்தாராவும் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு ஏற்ற கதையை என்னால் உருவாக்க முடியும் என்ற அவர்களின் நம்பிக்கையை நான் காப்பாற்றி இருப்பதாகவே கருதுகிறேன்,” என்கிறார் இயக்குநர் அஹமத்.
“ஜெயம் ரவி இதுவரை பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ‘டிக் டிக் டிக்’ படம் மூலம் விண்வெளியில்கூட பறந்துள்ளார். இவர் காவல்துறை அதிகாரியாக நடித்த அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.
“நயன்தாராவும் அப்படித்தான். மாறுபட்ட கதைக்களம் என்றாலே அவரது நினைவு வந்துவிடுகிறது. இந்தப் படத்திலும் சிறப்பாக பங்களித்துள்ளார்.
“இவர்கள் இருவரும் என் மீது கொண்டுள்ள நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கும் அதேவேளையில், எனக்கான பொறுப்பு அதிகரித்திருப்பதையும் உணர்கிறேன்,” என்கிறார் அஹ்மத்.
இப்படத்தில் குற்றங்களைத் தடுக்கவும் குற்றவாளியைப் பிடிக்கவும் ஜெயம் ரவி பல்வேறு விதமாகப் போராடுகிறார். அவருக்கு உதவி செய்கிறார் நயன்தாரா.
இதற்கிடையே, சென்னையில் ‘இறைவன்’ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய ஜெயம் ரவி, தாம் இயக்குநராவது உறுதி என்றும் தனது முதல் படத்தில் விஜய்சேதுபதியை இயக்குவதே தமது விருப்பம் என்றும் குறிப்பிட்டார்.
“என்னுடைய சகோதரர் மோகன் ராஜா அலுவலகத்திலும் ‘எம்.குமரன்’ படத்திலும் ஜெயம் ரவியைப் பார்த்திருக்கிறேன். தாம் நேரில் பார்த்த முதல் கதாநாயகன் ஜெயம் ரவிதான் என்று இங்கே குறிப்பிட்டார் சேதுபதி. உண்மையில், நான் படம் இயக்க வேண்டும் என்று நினைத்த முதல் நாயகன் நீங்கள்தான் விஜய்சேதுபதி. உங்களை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்,” என்றார் ஜெயம் ரவி.
ஒரு நடிகனுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் விஜய் சேதுபதியிடம் இருப்பதாகக் குறிப்பிட்ட ஜெயம் ரவி, சேதுபதியை வைத்து படம் இயக்கினால், நன்றாக நடிப்பதுடன் எல்லா வேலையும் சேதுபதியே செய்துவிடுவார் என்றார். இதனால் நல்ல இயக்குநர் என்ற பெயர் எளிதில் தமக்கு கிடைத்துவிடும் என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய விஜய் சேதுபதியிடம், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “ஏற்கெனவே ஒரு கதையில் அவருடன் நடிக்கக் கேட்டனர். நடிக்க இயலாது என்று சொல்லிவிட்டேன். அதற்கான காரணத்தை மேடையில் சொல்ல முடியாது.
“பின்னர் ‘போகன்’ படத்தில் நடிக்க அழைத்தபோது, கால்ஷீட் ஒதுக்க முடியாமல் போனது. எதிர்காலத்தில் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளது,” என்றார்.