முன்னணி நடிகர், நடிகையர் மத்தியில் இசை மீதான ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் நடிப்பின் மூலம் மட்டுமல்லாமல் சொந்தக் குரலில் பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் கோடம்பாக்க விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் பாடத் தெரிந்தவர்கள்தான் திரையுலகிலும் மேடை நாடகங்களிலும் நாயகன், நாயகியாக நடிக்க முடியும் என்ற நிலை காணப்பட்டது.
பின்னர் நாயகன், நாயகிக்கு மட்டுமல்லாமல் துணைக் கதாபாத்திரங்களுக்கும்கூட இரவல் குரல் (டப்பிங்) பெறப்பட்டது.
இப்போது, மீண்டும் முந்தைய நிலை திரும்பியுள்ளது. சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என இளம் நாயகர்களும் கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா போன்ற இளம் நாயகிகளும் சொந்தக் குரலில் பாடுகின்றனர். ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் போன்றோர் முழுநேர பின்னணிப் பாடகிகளாக மாறும் அளவுக்கு திறமைசாலிகளாக உள்ளனர்.
“அபிமான நடிகர்கள் சொந்தக் குரலில் பாடும்போது ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கிறது. இதை அந்த நடிகர்கள் உணர்ந்துள்ளனர். இப்பாடல்களை இணையத்தில் லட்சக் கணக்கானோர் பார்த்து, கேட்டு ரசிப்பதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. எனினும் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகையர் பாடல்களைப் பாட ஊதியம் கேட்பதில்லை. ரசிகர்களின் வரவேற்பு மட்டுமே போதும் என்கின்றனர். எனவேதான் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோர் பாடலாசிரியர்களாகவும் மாறிவிட்டனர்,” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.