திரையுலகில் பணியாற்றும் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் ரித்திகா சிங்.
அவரது நடிப்பில் வெளியாகியுள்ள புதிய தமிழ் படம் ‘கொலை’. விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார்.
ரித்திகா நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் ‘இறுதிச்சுற்று’. அதற்கு முன்பு குத்துச்சண்டை வீராங்கனையாக அறியப்பட்டவர், திரைப்பட நடிகையாகவும் வலம் வரத் தொடங்கினார்.
“திரைப்படங்கள் மூலமாக இளையர்கள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்க முடிந்தது. அந்த வகையில் மிகுந்த மனநிறைவு ஏற்பட்டது.
“தொடக்கத்தில் இதுபோன்ற கதாபாத்திரங்களாக அமைந்தன. அதன் பிறகு வணிக அம்சங்கள் நிறைந்த படங்களிலும் ஒப்பந்தமானேன். இப்போது மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்திருப்பதாக உணர்கிறேன்,” என்கிறார் ரித்திகா சிங்.
அஜித், தனுஷ், விஜய், துல்கர் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க விரும்புவதாகக் குறிப்பிடுபவர், இதன் மூலம் திரைத்துறை சார்ந்த பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுத்தேற முடியும் என்கிறார்.
“முன்பெல்லாம் முன்னணி நாயகர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றால் சற்றே பதற்றமாக உணர்வேன். இப்போது அவ்வாறு இல்லை.
“திரைப்படம் என்பது கூட்டு முயற்சி என்பதை உணர்ந்துள்ளேன். இனி எனது பயணத்தில் நிறைய பேருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே எனது முதன்மை விருப்பமாக இருக்கும்.
“நடிகர் மாதவனுடன் நடித்தபோது, நல்ல கதை என்று தோன்றினால் எந்தவித தயக்கமும் இன்றி அதில் நடிக்க வேண்டும் என்றும் உண்மையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார். இன்று வரை அதை தவறாமல் பின்பற்றுகிறேன்,” என்று சொல்லும் ரித்திகா, ஒரு பக்கம் திரைத்துறை, மறுபக்கம் விளையாட்டுத்துறை என இரண்டிலும் கவனம் செலுத்த விரும்புகிறார்.
தனது 16 வயதிலேயே அனைத்துலக கராத்தே போட்டியில் பங்கேற்று சாதித்தவர், மீண்டும் இப்போது அதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கிறார்.
‘கொலை’ படத்தில் நடித்துக்கொண்டே தென்னாப்பிரிக்க கராத்தே போட்டிக்காக பயிற்சி மேற்கொண்டாராம். தினமும் படப்பிடிப்பை முடித்த கையோடு, கராத்தே பயிற்சிக்காகவும் சில மணி நேரம் ஒதுக்கி தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.
“தமிழில் பேசுவதற்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். இப்போது தமிழில் ஓரளவு சரளமாகவும் தெளிவாகவும் பேச முடிகிறது. மிக விரைவில் தமிழில் நான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு நானே பின்னணி குரல் கொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
“திரையுலகில் பணியாற்றுவதன் மூலம் என்னுடைய நீண்ட நாள் விருப்பங்கள் சில நிறைவேறி உள்ளன. ‘கொலை’ படத்தில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற காவல் அதிகாரியாக நடித்துள்ளேன்.
“சிறு வயதில் இருந்தே ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற விருப்பம் உண்டு. நிஜத்தில் அது சாத்தியமாகவில்லை. ‘கொலை’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்ததன் மூலம் அந்த ஆசை நிறைவேறியது. இதற்காக அப்படத்தின் இயக்குநர் பாலாஜிக்கு நன்றி சொல்ல வேண்டும்,” என்கிறார் ரித்திகா சிங்.
ஒரே சமயத்தில் பல பணிகளைச் செய்வது சிரமமாக இருந்தாலும் பெரும் மனநிறைவு ஏற்படுவதாகச் சொல்பவர், திறமையுள்ள சிறார்களையும் இளையர்களையும் தேர்வு செய்து விளையாட்டுத்துறையில் பயிற்சி அளிக்க விரும்புகிறார்.
அதற்கான நடவடிக்கைகளை அவர் அமைதியாக மேற்கொண்டு வருவதாகத் தகவல்.
திரையுலகில் ரித்திகாவுக்கு நெருக்கமான சிலர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.