ஆ. விஷ்ணு வர்தினி
அடர்காடு, மலைகள் ஆகியவற்றைத் தனது களமாகக் கொண்ட ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒவ்வொரு கட்டத்திலும் ஆபத்துகள் நிறைந்ததாக இருந்தது. நுட்பமான, பயங்கரமான அதிரடி காட்சிகள் கொண்டிருந்த அது ஐஃபோன் காட்சிகளைக் கொண்டதாகவும் அமைந்தது. தமது இருபதாண்டு கால படப்பிடிப்பு அனுபவத்தில் இத்தகைய முதல் முயற்சிகளுக்கான தளமாக ‘விடுதலை’ விளங்கியதாகக் கூறினார், திரைப்பட ஒளிப்பதிவாளர் ரா. வேல்ராஜ்.
இயக்குநர் வெற்றிமாறனுடன் ஐந்தாவது முறையாக இணையும் வேல்ராஜ், முன்கூட்டியே தயாராக முடியாத வகையில், எதிர்பாரா சவால்கள் விடுதலையின் படப்பிடிப்பின்போது குறுக்கிட்டதை புன்னகையுடன் நினைவுகூர்ந்தார்.
மலைமீதுள்ள சிறிய பாதைகளில் பெரிய படப்பிடிப்புக் கருவி களைக் கொண்டுசெல்ல முடியாததும் பூச்சிகளுக்கு இரையாவதும் அவற்றில் அடங்கும்.
ஆரம்பக் காட்சிகளில் நடிகர் சூரி மேடுபள்ளங்களைத் தாண்டி உடைமைகளைச் சுமந்து வரவேண்டும். மலை உச்சியில் இருந்த ஓர் ஆள் மட்டுமே செல்லக்கூடிய சிறு பாதைவழி அவரும் சக நடிகரும் நடந்து செல்வர். வேறு வழியின்றி, கம்பில் கட்டப்பட்டு ஐஃபோன் 13ல் ‘4K’ அமைப்பில் அக்காட்சி எடுக்கப்பட்டிருந்தது.
“முதன்மை கேமராவை அவ்வளவு தூரத்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை. சுற்றிலும் மரங்களும் செடிகொடிகளும் இருந்ததால், படப்பிடிப்பாளரான எனது சிறு அசைவும் அவற்றை அசையச் செய்யும்; பின்னணியில் இருந்த என்னைக் காட்டிக் கொடுத்துவிடும். ஐஃபோனில் படம்பிடிப்பதே இதற்கு தீர்வு என நாங்கள் முடிவு செய்தோம்,” என்று தமிழ் முரசிடம் கூறினார் திரு வேல்ராஜ்.
ரசிகர்களின் மனதை வென்றுள்ள ‘உன்னோடு நடந்தா’ பாடலின் படப்பிடிப்பு திரு வேல்ராஜுக்கு மற்றொரு சவாலான அனுபவமாக அமைந்தது.
திரைப்பட இரவுக்காட்சிகள் பல பகலில் எடுக்கப்பட்டு, பின்னர் இரவுபோல காட்சியளிக்க திருத்தம் செய்யப்படக் கூடியவை. இப்பாடலின் காட்சிகளோ, ஒருவார காலத்துக்கு முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில் இரவில் எடுக்கப்பட்டவை.
நிலவு வெளிச்சத்தை ஏற்படுத்துவதற்கு கிட்டத்தட்ட ஆயிரம் மின்விளக்குகள் மரங்களில் கட்டப்பட்டன. கைவிளக்கு வெளிச்சத்திலேயே நடிகர்களின் முகங்கள் தெரியவேண்டும்.
“காட்டுப்பகுதியில் இரவில் படம் பிடிப்பது ஆபத்தானது, சவாலானதும்கூட. இப்படி பலவகைகளில் ‘விடுதலை’ எனது கண்ணோட்டங்களை விரிவுபடுத்தி உத்திகளை மெருகேற்றி உள்ளது,” என்றார் திரு வேல்ராஜ்.
அதிகம் போற்றப்பட்ட படத்தின் வெட்டுக்களில்லாத ஐந்து நிமிட விபத்துக் காட்சியை எடுக்க ஒருமாதக் காலமும் எட்டுக் கோடி ரூபாயும் செலவானதாக திரு வேல்ராஜ் விளக்கினார். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அக்காட்சியின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கு முன்னர் விடுதலையின் கதைக் கரு உதயமானது. அச்சமயத்தில் இயக்குநர் பாரதிராஜாவே விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு ஆலோசிக்கப்பட்டதாக திரு வேல்ராஜ் பகிர்ந்துகொண்டார்.
படப்பிடிப்புத் தளங்களுக்கு வரும் சிரமங்கள் கருதி அவர் விலகியதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி இணைக்கப்பட்டு, திரைப்படம் திட்டமிட்டதைவிட பிரம்மாண்டமான முறையில் பரிமாணமேற்றது. 40 நாள் நீடிக்க இருந்த படப்பிடிப்பு 180 நாள்கள் பிடித்ததோடு இரு பாகத் தொடரானது.
பெண்களைத் துன்புறுத்தும் வன்முறை காட்சிகள், யதார்த்தமான அதிரடி சண்டை காட்சிகள் ஆகியவை வெற்றிமாறனின் பாணிக்கே உரியவை. இவை அசுரன், வடசென்னை படங்களிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றை காட்சியமைக்கும்போது ஏற்பட்டது போலவே, விடுதலையின் சில காட்சிகள் திரு வேல்ராஜை இப்போதும் சிலிர்க்க வைப்பவை.
மக்களுக்கான இயக்குநராக வெற்றிமாறனை குறிப்பிட்ட அவர், “ஒவ்வொரு காட்சியும் கண்களால் நேரில் காண்பதுபோல இயல்பாக இருக்கவேண்டும், ஒவ்வொரு வசனமும் அர்த்தமுள்ளதாய் இருக்கவேண்டும் என்பதை வெற்றிமாறன் உறுதிபடுத்தினார்,” என்றார்.
இன்னும் கால்வாசியே எஞ்சியுள்ள விடுதலை பாகம் இரண்டின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும். திரைப்படம் ஆண்டிறுதிக்குள் வெளியாகலாம். மக்கள் கட்டாயம் பாகம் இரண்டை எதிர்பார்த்துக் காத் திருக்க வேண்டும்; பாகம் ஒன்று வெறும் முன்னோட்டமே என்று கூறியுள்ளார் திரு வேல்ராஜ்.
வெற்றிமாறனின் அடுத்த திரைப்படமான ‘வாடிவாசல்’ படத்திலும் திரு வேல்ராஜ் இணைந்துள்ளார். செப்டம்பர் மாதத்தில் அதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 2015ல் நடிகர் தனுஷின் ‘தங்கமகன்’ திரைப்படத்துக்குப் பின்னர் தற்சமயம் இயக்கத்தில் இறங்குவதாக இல்லை என்றும் திரு வேல்ராஜ் தெரிவித்தார்.
இவ்வாண்டு வெளியான ‘விடுதலை’ பாகம் ஒன்று படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பாளர் ரா.வேல்ராஜ்.