இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த சுற்று தொடங்கி உள்ளதாகச் சொல்கிறார் ஏமி ஜாக்சன்.
அவரது சொந்த ஊரான லண்டன்தான் இப்படத்தின் கதைக்களம். சிறை அதிகாரி சாண்ட்ரா ஜேம்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“பெரும்பாலான காட்சிகளை லண்டனில்தான் படமாக்கி உள்ளனர். அதனால் உற்சாகமாக உணர்ந்தேன். இயக்குநர் ஏ.எல்.விஜய் எப்போதும் முழு சுதந்திரம் அளிப்பார். அவருடன் இணைந்து பணியாற்றுவது அலாதியான அனுபவம்,” என்கிறார் ஏமி.
“ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மதராசபட்டினம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் விஜய் வழங்கியபோது லண்டன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். தமிழ் சினிமாவில் நடிக்கும் உற்சாகத்துடன் கிளம்பி சென்னையை அடைந்தேன்.
“மொழி தெரியாமல், நாடு கடந்து நடிக்க வந்திருக்கும் ஒரு நடிகைக்கு முதல் படமே சிறப்பான படமாக அமைவது பெரிய விஷயம். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. இயக்குநர் விஜய், ஆர்யா என்று அருமையான மனிதர்கள் எனக்கு நண்பர்களாக வாய்த்தனர்.
“தமிழ் சினிமா, சென்னை, நடிப்பு என்று பல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தது அவர்கள்தான். அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இப்போது வரை உதவியாக உள்ளன,” என்று கடந்த காலத்தை திரும்பிப்பார்த்து மகிழ்கிறார் ஏமி.
ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்த பின்னர் லண்டன் சென்றவர், திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டார். இந்நிலையில், அவரை மீண்டும் நடிக்க வைத்துள்ளார் விஜய்.
‘அச்சம் என்பது இல்லையே’ படத்தில் சண்டைக் காட்சிகளும் உள்ளனவாம். நவீன ரக துப்பாக்கியைக் கையில் ஏந்தி, எதிரிகளை சுட்டு வீழ்த்தும் காட்சிகளில் அசத்தி உள்ளாராம் ஏமி.
“திடீரென ஒருநாள் இயக்குநர் விஜய் தொடர்புகொண்டு பேசினார். எனக்கேற்ற நல்ல கதாபாத்திரம் இருப்பதாகவும் உடனே சென்னைக்கு வரவேண்டும் என்றும் கூறியதும் உடனே ஒப்புக்கொண்டேன். கதையைக்கூட கேட்கவில்லை. காரணம் அவர் மீதான நம்பிக்கை. “சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். அவர் சொல்வதை முழுமையாக நம்புவேன். இன்றுவரை நல்ல நண்பராக நீடிக்கிறார். எந்தப் பிரச்சினை என்றாலும் அவரிடம் ஆலோசனை கேட்பேன். தமிழ்ப் படங்களில் நடிக்காத நேரங்களிலும் அவருடன் அடிக்கடி பேசிக்கொண்டுதான் இருந்தேன்,” என்று சொல்லும் ஏமி, இதுவரை சிறை அதிகாரி கதாபாத்திரத்தில் தாம் நடித்ததில்லை என்கிறார். இந்தக் கதாபாத்திரத்துக்காக தற்காப்புக் கலை, குத்துச்சண்டை எனப் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டாராம். அருண் விஜய்யுடன் முதன்முதலாக இணைந்து நடிக்கிறாராம்.
“அருண் விஜய் எளிமையான மனிதர். இயல்பாகப் பேசிப் பழகுகிறார். சண்டைக் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என கற்றுக் கொடுத்தார். இவரைப் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும்போது நிறைய நுணுக்கங்களைக் கற்றுத்தேற முடியும். மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஆசை அதிகரித்துள்ளது. நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன்,” என்கிறார் ஏமி.
அனைத்துலக குற்றத்தடுப்பு, பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு அமைப்பின் தூதராகச் செயல்பட்டு வரும் அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது கவலை அளிப்பதாகச் சொல்கிறார்.
“உலகம் முழுவதும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேசுவது பெரிதல்ல. இது பெண்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல என்ற புரிதல் ஏற்படுவதுதான் முக்கியம்.
“பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்தனை வன்கொடுமைகளுக்கும் ஆணாதிக்கச் சமூகம்தான் காரணம். சிறு வயது முதல் ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் அவர்களுக்கு என்னவெல்லாம் கற்றுத் தருகிறோம் என்பதில்தான் தீர்வுகளும் அடங்கி உள்ளன. ஆண் குழந்தைகளுக்கு மூன்று அல்லது நான்கு வயதாகும்போதே இரக்கம், அன்பு, அனுதாபம், சமத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுத்தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்கிறார் ஏமி.