இந்தியாவில் கிரிக்கெட் என்பது மற்றொரு மதம் என்பார்கள். கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். அனைத்துலக அளவில மிகப் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒன்று.
கடந்த 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்ற பிறகுதான் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான மவுசு பன்மடங்கு அதிகரித்தது எனலாம்.
இந்நிலையில், இந்திய அணியின் உலகக் கிண்ண வெற்றியை மையமாக வைத்து பல்வேறு மொழிகளில் உருவாகி உள்ளது '83' திரைப்படம். அண்மையில் வெளியீடு கண்ட இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
இதன் மூலம் தமது திரையுலகப் பயணத்தில் புது வெளிச்சம் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார் நடிகர் ஜீவா.
'83' படத்தில் இந்திய அணியில் தொடக்க மட்டையாளராக இடம்பிடித்திருந்த, தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இவர்தான்.
"அதிர்ஷ்டவசமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. திரையுலகத்தினர் பங்கேற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் தமிழ்த் திரையுலக அணியில் நான் இடம்பெற்றிருந்தேன்.
"அந்தப் போட்டியை நடத்திய நிறுவனம் ஒன்றின் தலைவர்தான் '83' படத்தின் தயாரிப்பாளர்.
"இந்தப் படத்தை தயாரிப்பது என முடிவு செய்தபோது, அவருக்கு என் நினைவு வந்துள்ளது.
"நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் நான் ஆடிய விதத்தைப் பார்த்தபோது, அவருக்கு தன் கண்ணெதிரே ஸ்ரீகாந்த் விளையாடுவதைப் போல் இருந்ததாம். அதனால் என்னை ஒப்பந்தம் செய்தனர்.
"கிரிக்கெட் திடலில்தான் ஸ்ரீகாந்த் எதிரணியை வீழ்த்த வேண்டும் என்பதால் இறுக்கமாகக் காணப்படுவார். ஆனால் நிஜத்தில் அவர் மிக இயல்பானவர். மிகுந்த நகைச்சுவை உணர்வுமிக்கவர். நட்பாகப் பழகுவார்.
"அவரை நேரில் சந்தித்து, விவரம் தெரிவித்து, ஆலோசனை கேட்டபோது, எது பற்றியும் கவலைப்படாமல் நடியுங்கள். அப்போதுதான் நான் திரையில் தெரிவேன் என்றார். அதை மனதில் வைத்துக்கொண்டு தான் படத்தில் நடித்தேன். அதற்கான பாராட்டுகள் இப்போது கிடைக்கிறது," என்கிறார் ஜீவா.
இவர் கடைசியாக நடித்த சில படங்கள் வசூல் ரீதியில் சாதிக்கவில்லை. அதனால் ஒரு வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு '83' பட வெற்றி நிம்மதியை அளித்துள்ளது.
தற்போது 'வரலாறு முக்கியம்', 'கோல்மால்' ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார் ஜீவா.
"இரு படங்களிலும் நகைச்சுவை சற்று தூக்கலாக இருக்கும். இந்திப் பட வாய்ப்புகளும் தேடி வருகின்றன. ஆனால் எதையும் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.
"ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு வெளிச்சம் தென்படுகிறது. இந்தத் தருணத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.
"இந்தி, தமிழ்த் திரையுலகங்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. அவர்களுடைய அமைப்பு சற்று பெரியது. ஒரு படத்துக்காகச் செலவிடும் தொகையும் அதிகம். அதே வசதிகள் கிடைத்தால் தமிழிலும் பிரம்மாண்டப் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனினும் திறமை, தரத்தில் எந்த வகையிலும் தமிழ் சினிமா குறைந்துவிடவில்லை," என்கிறார் ஜீவா.
வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாத அனுபவத்தை '83' படம் தமக்கு தந்திருப்பதாகவும் இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும் என தாம் நினைத்துக்கூடப் பார்த்தது கிடையாது என்றும் சொல்கிறார்.
"படப்பிடிப்பின்போது மிகப்பெரிய ஹாலிவுட் படத்தில் நடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. பெரும்பாலான காட்சிகள் லண்டனில்தான் நடைபெற்றன. அங்கு திரளான கூட்டம் கூடும். அதையும் சமாளித்து காட்சிகளை மிக நேர்த்தியாகப் படமாக்கினர்.
"லண்டனில் உள்ள லார்ட்ஸ், ஓவல் திடல்களுக்கு தினமும் செல்வோம். சென்னையில் உள்ள தெருக்களில் கிரிக்கெட் விளையாடிய எனக்கு லார்ட்ஸ் திடலில் கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்.
"ஆனால் அதுதான் நடந்தது. லார்ட்ஸ் திடலில் நான் விளையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்து நண்பர்கள் பொறாமையால் புகைவிட்டனர்," என்று சிரிக்கிறார் ஜீவா.
ஜீவா
, :