கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு திரையுலகத்தினர் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார் நடிகர் சந்தீப் கிஷன்.
'மாநகரம்', 'மாயவன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சந்தீப், தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
"இந்தச் சவாலான காலகட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்றால் தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து உங்களுக்குத் தெரிய வந்தால் எனக்குத் தகவல் தெரிவியுங்கள்.
"நானும் எனது குழுவினரும் எங்களது சக்திக்குட்பட்ட வகையில் அந்தக் குழந்தைகளின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான உணவு, கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம்," என்று சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
இது சோதனையான காலகட்டம் என்றும் இச்சமயத்தில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பது மிக முக்கியம் என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையிலும் உதவிகள் செய்தவர் நடிகை சோனு சூட்.
இதையடுத்து சில பகுதிகளில் அவருக்கு கோவில்கள் கூட கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உயிருக்குப் போராடிய கொரோனா நோயாளியைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் விமானம் ஒன்றை தன் செலவில் அனுப்பி உதவி உள்ளார் சோனு.