நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தில் ‘ரத்து’ அதிகாரத்தின் மூலம் உலக அமைப்பில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நிராகரித்தது.
ஐக்கிய நாடுகள் சபையில் (ஐநா) 193 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. அச்சபையின் பாதுகாப்பு மன்றத்தில், பாலஸ்தீனத்தை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கும் வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது. இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. மீதமுள்ள 12 பாதுகாப்பு மன்ற உறுப்பினர்கள் ‘ஆம்’ என்று வாக்களித்தனர்.
“இரு நாடுகளுக்கிடையே இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொண்டுவருவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக நாங்கள் வாக்களித்ததால் நாங்கள் பாலஸ்தீனத்திற்கு எதிரானவர்கள் என்று அர்த்தமில்லை. மாறாக, இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வைக் கொண்டுவர முடியும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று ஐநாவுக்கான துணை அமெரிக்கத் தூதர் ராபர்ட் வுட் தெரிவித்தார்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், அமெரிக்கா பயன்படுத்திய ‘ரத்து’ அதிகாரத்தை “நியாயமற்றது, நெறிமுறையற்றது ” என்று சாடியுள்ளார்.
மேலும், இது பாலஸ்தீனத்தை ஐ.நா.வின் உறுப்பினராக சேர்த்துகொள்ள வேண்டும் என்பதை ஆதரிக்கும் அனைத்துலகச் சமூகத்தின் விருப்பத்திற்குச் சவால் விடுவதாக உள்ளது என அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.