சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல் - கூடூர், அரக்கோணம், சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் மொத்தம் 128 நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை வரும் ஜூலை மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், “ரயில் நிலையங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் குற்றவாளிகளைப் பிடிக்கவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
“சென்னை சென்ட்ரல், எழும்பூர், மூர் மார்க்கெட் வளாகம், மாம்பலம், சென்னை கடற்கரை, தாம்பரம், பேசின்பாலம், திருவள்ளூர், நுங்கம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், செங்கல்பட்டு, திருமயிலை, அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
“சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடம், சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் 26 நிலையங்களிலும் சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் 17 நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.
“ஒட்டுமொத்தமாக, சென்னை ரயில்வே கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை வரும் ஜூலைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு நிலையத்திலும் 10 சிசிடிவி கேமராக்கள் முதல் 25 சிசிடிவி கேமராக்கள் வரை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளனர்.