சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானாலும் அவை சற்று நேரங்களில் சரியானதாகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் சின்னம் சரிவரத் தெரியவில்லை என வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர். பின்னர் தேர்தல் அதிகாரிகள் அதனைச் சரி செய்தனர்.
விளாத்திக்குளம் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட 203 வாக்குச்சாவடி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டி .டி .ஏ. பள்ளி வாக்குச் சாவடி, சென்னை தியாகராய நகர் ராமகிருஷ்ணா பள்ளி, திருப்பரங்குன்றம் விளாச்சேரி வாக்குச் சாவடி, ஆத்தூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட சி.எஸ்.ஐ. பள்ளி வாக்குச் சாவடி, சென்னை சாலிகிராமம் பத்மா சாரங்கபாணி பள்ளி வாக்குச் சாவடி ஆகியவற்றில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி சிறிது நேரத்தில் பிரச்சினை சரி செய்யப்பட்டது.
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. மாதிரி வாக்குப்பதிவிலேயே 5 பேலட் யூனிட்; 8 கன்ட்ரோல் யூனிட்; 18 வி.வி. பேட் என மொத்தம் 31 இயந்திரங்கள் பழுது காரணமாக மாற்றப்பட்டன.