ஸ்பெயினில் சிங்கப்பூர் மாது ஆட்ரி ஃபாங் டிரூ கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஏப்ரல் 19ஆம் தேதி ஸ்பெயின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர் 43 வயது சிங்கப்பூரர். அவரின் பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை. ஆடவர் நீதிமன்றத்தில் இருக்கும் காணொளியையும் படங்களையும் ஸ்பெயின் காவல்துறை வெளியிட்டது.
39 வயது ஆட்ரி ஃபாங் டிரூ கடந்த வாரம் காணாமல்போனார். மாதின் உடல் சென்ற வார புதன்கிழமையன்று (ஏப்ரல் 10) மர்சியா வட்டாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆட்ரி ஃபாங் உடல் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குக் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. மாதின் உடலில் 30க்கும் அதிகமான கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டதாக ஸ்பானிய ஊடகங்கள் தெரிவித்தன.
திருவாட்டி ஃபாங் ஏப்ரல் 4ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து ஸ்பெயினுக்குத் தனியாக புறப்பட்டார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கொலை தொடர்பாக ஸ்பெயின் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்ரி ஃபாங்குக்கும் கைது செய்யப்பட்ட நபருக்கும் ஏற்கெனவே அறிமுகம் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.