சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியன் பணமோசடி வழக்கில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சீன குடிமகனான 45 வயது ஜாங் ருய்ஜின் ஒப்புக்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் ஜாங் குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜாங், சிஐஎம்பி வங்கியை ஏமாற்ற போலியான ஆவணங்களைத் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டதாக மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
மக்காவ்வில் உள்ள சொத்துகளை விற்பது போல் இரண்டு போலியான ஆவணங்கள் அவர் தயாரித்துள்ளார். அதன் பின்னர் அவர் ஹாங்காங் நிறுவனம் ஒன்றிடம் இருந்து கடனாக நிதி பெற்றதாக ஆவணம் தயாரித்துள்ளார்.
ஜாங் எட்டு மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். அவர் தனது 44 வயது காதலி லின் போயிங்குடன் செந்தோசாவில் உள்ள சொகுசு பங்களாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஜாங் உட்பட பத்து வெளிநாட்டவர்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து $3 பில்லியன் மதிப்புள்ள பணம், சொத்துகள் கைப்பற்றபட்டன.
ஜாங் மற்றும் லின் 10 ஆண்டுகளுக்கு மேலான பழக்கம் கொண்டவர்கள், அவர்களுக்கு சிங்கப்பூரில் 325 மில்லியன் டாலர் சொத்து இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.
லின்னும் சீன நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு மட்டும் 215.5 மில்லியன் டாலர் சொத்து உள்ளது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஜாங்கின் சொத்து மதிப்பு 109.8 மில்லியன் டாலர் என்று அதிகாரிகள் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்களில் லின் மட்டும்தான் பெண். அவர்மீது மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும், நீதிக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிணையில் வெளிவர விண்ணப்பம் செய்தனர். ஆனால் அது மறுக்கப்பட்டது. இருவரும் வெளிநாடுகளிக்குத் தப்பிச்செல்லும் வாய்ப்பு இருப்பதால் பிணை வழங்கப்படவில்லை.
ஜாங் டிசம்பர் மாதமும் பிணையில் வெளிவர விண்ணப்பம் செய்தார். அப்போது அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது.
ஏப்ரல் 2ஆம் தேதி மோசடி வழக்கில் 32 வயது கம்போடியக் குடிமகன் சூ வென்சியாங் குற்றங்களை ஒப்புக்கொண்டார். அவருக்கு 13 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 14ஆம் தேதி 41 வயது சைப்பிரஸ் நாட்டு குடிமகன் சூ ஹாஜின் குற்றங்களை ஒப்புக்கொண்டார். அவருக்கு 14 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 17ஆம் தேதி 32 வயது சீனக் குடிமகன் வாங் பாவ்சனுக்கு 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.