சுவா சூ காங்கில் உள்ள கனரக வாகன நிறுத்துமிடத்தில் டீசல் எண்ணெய் சட்டவிரோதமாக விற்கப்பட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோதமாக டீசல் விற்கப்படுவதாகக் கூறப்படும் காட்சி பதிவான காணொளி எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது.
மலேசிய லாரி ஒன்று, வேறொரு லாரியில் இருந்த கொள்கலனுக்கு டீசலை விநியோகித்தது அந்தக் காணொளியில் தெரிந்தது. இச்சம்பவம் சுவா சூ காங்குக்கு அருகே உள்ள ‘காலி பத்து’ கனரக வாகன நிறுத்துமிடத்தில் நடந்ததாக நம்பப்படுகிறது.
காணொளி பதிவேற்றம் செய்யப்பட்ட அன்றுதான் இச்சம்பவம் நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை. வாகனத்துக்குள்ளே இருக்கும் கேமராவில் காணொளி பதிவுசெய்யப்பட்டது; காணொளி 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியன்று பதிவுசெய்யப்பட்டதாகத் தெரிந்தது.
காணொளி பற்றித் தங்களுக்குத் தெரியும் என்றும் சம்பவம் குறித்துத் தாங்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு அது பதிலளித்தது.
இச்செயல், தீச்சம்பவம் நேராதிருப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை மீறியிருக்கக்கூடும் என்ற கண்ணோட்டத்தில் விசாரணை நடத்தப்படுவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இதற்கிடையே, வரி செலுத்தத் தேவையில்லாத டீசல் சட்டவிரோதமாக உபயோகிக்கப்படுவதைத் தாங்கள் அணுக்கமாகக் கண்காணிப்பதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சொன்னார்.
சிங்கப்பூருக்குள் நுழையும் வாகனத்தின் எரிசக்திக் கலனில் உள்ள டீசலுக்குப் பொருள், சேவை வரி உள்ளிட்ட வரிக் கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை. வாகனம் இயங்குவதற்காக மட்டும் டீசலைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை இதற்கு உள்ளது.