மேக்ஸ்வெல் ரோட்டுக்கு அருகே இருக்கும் 101 ஆண்டு பழமையான முன்னாள் செயின்ட் ஆண்ட்ரூஸ் மிஷன் மருத்துவமனை உருமாற்றம் காணவுள்ளது.
இக்கட்டடம், ஆக்கபூர்வ வாழ்க்கைமுறை, நல்வாழ்வு மையமாக மாற்றப்படவுள்ளது. பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஓரிடத்தில் வேலை பார்ப்பதற்கான வசதிகளும் இங்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 கடையநல்லூர் ஸ்திரீட்டில் அமைந்துள்ள இக்கட்டடத்தின் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஏலக்குத்தகையை சிங்கப்பூர் நில ஆணையம், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் சுகாதாரச் சேவைகளை வழங்கும் பெத்தெஸ்டா மெடிக்கல் அமைப்புக்கு வழங்கியது.
சமூக நிகழ்ச்சிகள், உடலுறுதி, உணவகங்கள் ஆகியவற்றுக்கான வசதிகளைத் தாங்கள் வழங்கவுள்ளதாக ஏலக்குத்தகையை வென்ற அமைப்பு அதன் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது என்று சிங்கப்பூர் நில ஆணையம் தெரிவித்தது.
இந்த மூன்று தளக் கட்டடத்தின் முதல் தளத்தில் உணவு, பானக் கடைகள் இடம்பெறும். இரண்டாவது, மூன்றாவது தளங்களில் பல நிறுவன ஊழியர்கள் ஒன்றாக வேலை செய்வதற்கான வசதிகளை செய்துதர பெத்தெஸ்டா மெடிக்கல் திட்டமிட்டுள்ளது. அதோடு, உடலுறுதிப் பகுதி, ஐஸ் குளியல் போன்றவற்றுக்கான வசதிகள் செய்துதரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.