சிறுவன் ஒருவன் வகுப்பில் மற்ற மாணவர்களுடன் அமர்ந்து அமைதியாக ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடத்தைக் கவனித்துக்கொண்டு இருந்தான்.
அவனுக்கு போதிய அளவு கல்வியறிவு எட்டவில்லை. இருந்தாலும் அவன் நேர்மையில் சிறந்தவனாக விளங்கினான்.
ஒருநாள் அவன் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு மாணவன் தன்னுடைய எழுதுகோல் காணவில்லை என்று ஆசிரியரிடம் கூறினான். மேலும் அந்த எழுதுகோலை தன் அருகில் அமர்ந்திருக்கும் மாணவனைக் காட்டி, “இவன்தான் எடுத்திருப்பான்,” என்று கூறினான்.
உடனே ஆசிரியர், அந்த மாணவனை அழைத்து கையில் வைத்திருந்த பிரம்பால் இரண்டு அடி கொடுத்தார்.
அப்போது அந்த மாணவன் ஒன்றும் சொல்லாமல் அடியை வாங்கிக்கொண்டு அமைதியாக அவனுடைய இருக்கையில் வந்து அமர்ந்தான்.
சிறிது நேரத்தில் எழுதுகோல் காணவில்லை என்று குற்றம் சாட்டிய மாணவன் தன் இருக்கைக்கு கீழே அந்த எழுதுகோல் விழுந்து கிடப்பதைக் கண்டான்.
உடனே ஆசிரியரிடம், “என்னை மன்னித்துவிடுங்கள் ஆசிரியர்! என்னுடைய எழுதுகோல் கீழே கிடந்தது,” என்று கூறினான்.
அதைக் கேட்ட ஆசிரியர், தான் அடித்த மாணவனை அழைத்து, “நீ எடுக்கவில்லைதானே! பின் நான் அடிக்கும்போது நீ ஏன் நான் எடுக்கவில்லை என்று கூறவில்லை. தேவையில்லாமல் அடி வாங்கி இருக்க மாட்டாய் அல்லவா?” என்று சற்று வருத்ததுடன் கூறினார்.
அதற்கு அந்த மாணவன், “நீங்கள் அடிப்பதற்கு முன்னரே என்னிடம் அதை பற்றி கேட்டிருந்தால், நான் எடுக்கவில்லை என்று கூறியிருப்பேன். ஆனால் நீங்கள் அடிக்கும் பொழுது கேட்டதால் நான் ஒன்றும் சொல்லவில்லை.
ஒருவேளை நீங்கள் அடிக்கும் பொழுது நான் திருடவில்லை என்று கூறியிருந்தால் நான் பயந்துபோய் பொய் சொல்கிறேன் என்று நினைத்திருப்பீர்கள்.
நான் பயந்து விட்டேன் என்று கூட யாரும் நினைக்கக் கூடாது. அதுதான் எனக்கு வலிக்குமே தவிர, நீங்கள் அடிப்பது ஒன்றும் எனக்கு வலிக்காது,” என்று பட்டென்று கூறினான்.
பிற்காலத்தில் அஞ்சாநெஞ்சன் என்று போற்றப்பட்ட நெப்போலியன்தான் அந்த மாணவன்.
ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒருவராகக் கருதப்பட்டவர் நெப்போலியன் பொனபார்ட். தான் வாழ்ந்த காலத்தில் ஏராளமான வெற்றிகளை தன் நாட்டிற்கு தேடித் தந்தவர்.
தனது வலிமையாலும் புத்திசாலித்தனத்தாலும் ஐரோப்பிய கண்டத்தையே ஆட்டிப் படைத்தவர்.
‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பதுபோல இளம் வயதிலேயே பயம் அறியாதவராய் இருந்தார். ‘வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பிக்கையின் மீதி,’ இதுதான் நெப்போலியன் என்ற மாவீரனின் தாரக மந்திரமாக இருந்தது.
அந்த மந்திரம்தான் வெற்றி மேல் வெற்றிகளை நெப்போலியனிடம் குவித்தது. அரச வம்சத்தில் பிறக்காத ஓர் ஏழைகூட மன்னனாக முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது.
நூல்கள் வாசிப்பதில் அதிக விருப்பம் கொண்ட நெப்போலியன் ஒரு நாளில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரந்தான் உறங்குவாராம்.
அப்படி அவர் சிரமபட்டு படித்துச் சேர்த்த அறிவுச்செல்வம்தான் அவரை வெறும் மாவீரன் என்ற நிலையைத் தாண்டி ஒரு தேசத்தையே மிகச்சிறப்பாக நிர்வகிக்கும் மன்னனாக உயர்த்தியது.
‘முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது,’ என்பது நெப்போலியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம்.
நெப்போலியனிடம் குடிகொண்டிருந்த துணிவு, நம்பிக்கை, முயற்சி ஆகியவை நமக்கு இருந்தால் நமக்கும் நாம் விரும்பும் வெற்றியும் அதன்மூலம் அந்த வானமும் வசப்படும்.