ஏப்ரல் 13ஆம் தேதி சனிக்கிழமையன்று காலாங் சமூக மன்றத்தில், காலாங் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் (ஐஏஈசி) ஏற்பாட்டில் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்றது நவரசத் திருவிழா 2024.
2012ல் தொடங்கிய நவரசத் திருவிழா, கொவிட்-19 தொற்றுகாலங்களிலும் இணையம்வழி தொடர்ந்து இவ்வாண்டு பத்தாம் ஆண்டாக நடந்தது.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் ஜாலான் புசார் குழுத்தொகுதியைச் சார்ந்த தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரைப் போட்டிகள் நடைபெற்றன.
உயர்நிலைப் பிரிவில் இரு புத்தாக்கச் சவால்கள் இடம்பெற்றன. ‘ரீல்ஸ்’ சவாலில் ‘தமிழர் உணவு’ என்ற கருப்பொருளில் மாணவர்கள் ஒரு நிமிட சுவாரசியக் காணொளிகளைப் படைத்தனர்.
‘முடிவு என்ன’ சவாலில் காலாங் ‘ஐஏஈசி’ இளையர் உறுப்பினர்கள் தயாரித்த குறும்படம், முடிவு நீக்கப்பட்டு போட்டியாளர்களிடம் காண்பிக்கப்பட்டது. போட்டியாளர்கள் தாமாக ஒரு முடிவை உருவாக்கி நடித்தனர்.
உயர்நிலைப் பிரிவில் பாடல், நாடகம், ஐம்பெருங்காப்பியங்களைச் சார்ந்த ஓவியப் படைப்பு, நடனம் ஆகியவற்றோடு தொடக்கநிலைப் பிரிவில் வண்ணம் தீட்டுதல், கதை சொல்லுதல் போன்ற மற்ற போட்டிகளும் இடம்பெற்றன.
சவால் கிண்ணத்தை ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி தட்டிச் சென்றது. இரண்டாம் நிலையில் பார்ட்லி உயர்நிலைப் பள்ளியும் மூன்றாம் நிலையில் தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியும் வெற்றிபெற்றன.
“‘இளையர்களால் இளையர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகள்’ என்பதற்கேற்ப இவற்றுக்கான புத்தாக்க ஆலோசனைகள் பலவும் இளையர்களிடமிருந்தே எழுந்தன,” என்றார் நவரசத் திருவிழாவை 2012ல் தொடங்கி, இன்று காலாங் ஐஏஈசி துணைத் தலைவராக சேவையாற்றும் மீனா ரமேஷ்.
“காலந்தாண்டி நிற்கும் முத்தமிழின் அழகிற்கும் மரபிற்கும் மெருகேற்றிய புத்தாக்கப் படைப்புகளைக் கண்டு வியந்தோம்,” என்றனர் இவ்வாண்டு நவரசத் திருவிழாவை வழிநடத்திய குமரனும் வைஷ்ணவியும்.
நவரசத் திருவிழாவின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி ஓர் இணைய சஞ்சிகையும் வெளியானது. அதை https://tinyurl.com/NavarasaThiruvizha இணையத்தளத்தில் காணலாம். @kallangcciaec இன்ஸ்டகிராம் தளத்தையும் நாடலாம்.