எதென்ஸ்: கிரேக்கத்தில் உள்ள சுற்றுலாத் தளமாக கிரேட்டே தீவில் காட்டுத்தீ மூண்டுள்ளது. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் போராடி வருவதாக கிரேக்க அதிகாரிகள் புதன்கிழமை (ஜூலை 2) தெரிவித்தனர்.
காட்டுத்தீயால் காடு அழிவதுடன் அருகில் உள்ள வீடுகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து குடியிருப்பாளர்கள், சுற்றுப்பயணிகள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயணைப்புப் பணிகளில் குறைந்தது 230 தீயணைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு 46 தீயணைப்பு வண்டிகளும் நீர் லாரிகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை (ஜூலை 2) காட்டுத்தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவியதாகவும் தீயணைப்புப் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புப் பணிகளுக்குத் தேவையான கூடுதல் உதவி கிரேக்கத் தலைநகர் எதென்சிலிருந்து படகு மற்றும் விமானம் மூலம் அனுப்பிவைக்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.
தீயை அணைப்பது சவால்மிக்கதாக உள்ளது என்று கிரேக்கத் தீயணைப்புப் படை தெரிவித்தது. சில வீடுகள் தீயில் சேதமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
யாரேனும் காயமடைந்திருக்கிறார்களா என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
காட்டுத்தீ மூண்ட இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.