நியூயார்க்: வர்த்தகம் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட 15 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ளது.
அந்நிறுவனங்கள் அமெரிக்காவின் மின்னணுப்பொருள்களை வாங்கி அதை ஈரானியப் படைகள், ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் போராளிகளுக்குக் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஈரானியப் படைகள், ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் போராளிகள் பயன்படுத்திய ஆளில்லா வானூர்திகளில் அமெரிக்காவின் மின்னணுப்பொருள்கள் இருந்தன.
கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 10 சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் வர்த்தகக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கும்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் அமெரிக்காவின் மின்னணுப்பொருள்கள் இருந்தன. இதையடுத்து மேலும் ஐந்து சீன நிறுவனங்களைக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் அமெரிக்கா இணைத்தது. தற்போது வெளியான பட்டியலில் துருக்கி, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவற்றில் செயல்படும் நிறுவனங்களும் உள்ளன.
ஈரானின் ஆதரவில் இயங்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக ஏரே சைனா எலக்டிரானிக்ஸ் நிறுவனமும் வர்த்தகக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், வெளிநாட்டுக் கொள்கைகளில் தலையீடு ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மட்டுமே கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.
பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய உரிமம் வாங்க வேண்டும். அவை மறுக்கப்படும் சாத்தியமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.