உக்ரேன் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் மனமாற்றம்

ரஷ்யா ஒரு காகிதப்புலி: அதிபர் டிரம்ப்

2 mins read
30de768d-78f4-48e2-af36-39f7bc1b3a21
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலன்ஸ்கியை ஐக்கிய நாட்டுச் சபையின் 80வது பொதுக் கூட்டத்தில் சந்தித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஐ.நா.பொதுச் சபை/அமெரிக்கா: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவோடு போரில் இழந்த பகுதிகள் முழுவதையும் உக்ரேன் மீட்டெடுக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டமைப்பு (வடஅட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு) நாடுகளின் ஆகாயவெளியின் எல்லைகளை மீறும் ரஷ்யாவின் விமானங்களைச் சுட்டு வீழ்த்துமாறும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

பதற்றம் சூழ்ந்த நிலையில் ரஷ்ய அதிபர் புட்டின் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்ற நம்பத்தகுந்த பங்காளிதானா என்பதில் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதையும் அதிபர் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். அதுபற்றி விரைவில் தெரிவிப்பதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா தற்போது பெரிய பொருளியல் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அதனை உக்ரேன் பயன்படுத்தி உடனே செயல்படவேண்டும் என்று அதிபர் டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்தக் கருத்துகளை பெரிய மாற்றம் என்று உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

ஆயினும், திரு டிரம்ப்பின் வார்த்தைகளை வைத்து, ரஷ்யா மீது பெரிய தடைகள் விதிக்கப்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இதற்கு முன்பாக, அமைதி ஏற்படவேண்டுமென்றால், உக்ரேன் அதன் பகுதிகளை இழக்கத் தயாராக வேண்டும் என்று அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புட்டினை ஒரு மாதத்துக்கு முன்புதான் திரு.டிரம்ப் சந்தித்தார். “குறிக்கோளில்லாமல் மூன்று ஆண்டுகளாக போரிடும் ரஷ்யா ஒரு காகிதப் புலி, ஐரோப்பிய நாடுகளின் வான் எல்லைகளில் அத்துமீறும் அதன் விமானங்களை சுட்டு வீழ்த்த வேண்டும்” என்று அதிபர் டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்