புத்ரஜெயா: ஜோகூரின் ஃபார்ஸ்ட் சிட்டியில் சூதாட்டக்கூட உரிமத்துக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பொய்ச் செய்தி பரப்புவோர், சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“மாமன்னர் விருப்பம் கொண்டுள்ளதாகக் கூறப்படும் ஃபாரஸ்ட் சிட்டி தொடர்பில் இதுபோன்றதொரு திட்டத்தைப் பற்றியோ யாரேனும் இதுபோன்ற திட்டங்களை முன்மொழிந்ததாகவோ நான் இதுவரை கேள்விப்படவில்லை,” என்றார் அவர்.
“இதைப் பற்றி ஒருமுறைகூட மாமன்னர் எதுவும் கூறியதில்லை,” என்று தேசிய அளவிலான தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களை மே 1ஆம் தேதி துவங்கிவைத்தபோது திரு அன்வார் பேசினார்.
இந்தப் பேச்சு எவ்வாறு வந்தது என்று அவர் கேள்வி எழுப்பியதுடன் அரசுக்கு எதிராகத் தீங்கிழைக்கும் வதந்திகள் எழக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
“சுங்கை பூலோவில் உள்ள என் பழைய சிறை அறையில் (எனக்குப் பதிலாக) இருக்க வேண்டியவர்கள் இவர்கள்,” என்றார் அவர்.
ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டி பகுதியில் சூதாட்டக் கூடம் திறப்பது குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பெர்சத்து கட்சியின் தகவல் குழு உறுப்பினர் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின் பதிவிட்டார்.
மலேசிய மாமன்னருக்கு எதிராக அவதூறு பரப்பியது தொடர்பாகத் தன் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 30ஆம் தேதி ஜோகூர் பாரு அமர்வுகள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கோரினார் பட்ருல் ஹிஷாம்.